ஈடிபஸ் அரசன் – சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்

ஈடிபஸ் அரசன்

(சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்)
“தீப்ஸ் நாட்டு மக்களே! ஈடிபஸைப் பாருங்கள்… ஸ்பிங்ஸின் புகழ் வாய்ந்த புதிர்களின் விடைகளைக் கண்டறிந்த மன்னர். பலம் வாய்ந்த மன்னர்களை வெற்றி கண்டவர்… மானிடர்களின் கண்கள் பொறாமையோடுதான் இவரை நோக்கின… இறுதியில் விதி இவரை இப்படி அழித்து வெற்றி கண்டது!
ஒவ்வொரு மனிதனும் மனித குலத்தின் பலவீனங்களின்போது தனது கடைசி நாளை எண்ணிப் பார்க்கட்டும்!
பதவியால், செல்வத்தால், அதிர்ஷ்டத்தால், யாரும் இறுமாந்து இருந்துவிட வேண்டாம்.
மரணத் தறுவாயில், துன்பங்களற்ற ஒரு நினைவுச்சரத்தை ஒருவன் கொள்ளமுடியுமானால்,
அவன் தன் நல்அதிர்ஷ்டத்தை அப்போது எண்ணிச் சந்தோஷப்படட்டும்!” (நாடகத்தின் இறுதி வரிகள்)

ஈடிபஸ் அரசன் –  நாடகம்

ஆங்கிலவழித் தமிழாக்கம்:  க. பூரணச்சந்திரன்; உதவி-திருச்சி நாடகச்சங்கம் ஜம்புநாதன்

காட்சியமைப்பு, பிற பணிகள், இசை, இயக்கம்: க. பூரணச்சந்திரன்
இயக்கத்தில் உதவி: நாடகச் சங்க நண்பர்கள் கோவிந்தராஜ், மனோகர்.

[இந்த நாடகம், 2007ஆம் ஆண்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முத்தமிழ் விழாவின் போது மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.
அதில் நடித்தவர்களுக்கு-தமிழ் முதுகலை மாணவர்களுக்கும், குறிப்பாக ஈடிபஸாக நடித்த நவசக்திவேலுக்கும், அரசி ஜொகாஸ்டாவாக நடித்த மோகனப்ரியாவுக்கும் என் நன்றிகள் உரியன.

அந்த ஆண்டு நான் தமிழ்த்துறைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஆண்டு. அதற்கென என் மாணவர் (இன்று மிகப் பிரபலமாக விளங்கும்) இயக்குநர் திரு. ஏ.ஆர். முருகதாஸ் நாடக விழாவில் பங்குகொள்ளவும், முத்தமிழ்விழாவின் இறுதி உரையாற்றவும் வந்து பங்கேற்றார்.]

நாடக அறிமுகம்

கிரேக்க மொழியில் மிகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் சோஃபோக்ளிஸ் எழுதிய பிரசித்தமான அவல நாடகம் (tragedy) இது. உளப்பகுப்பாய்வில் (சைக்கோ-அனாலிசிஸில்), இக்கதையின் அடிப்படையில்தான் ‘ஈடிபஸ் சிக்கல்’ என்ற சொல்லை உருவாக்கினார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டு. உலகின் முதன்மையான, தலைசிறந்த நாடகங்களில் இது ஒன்று. அழுத்தமான, செறிவான கதையமைப்பும், சஸ்பென்ஸும், விறுவிறுப்பும் கொண்ட இந்த நாடகம் உலகமொழிகள் பலவற்றில் பெயர்க்கப்பட்டுள்ளது. இதன் கதையை உலகின் எத்துறை சார்ந்த அறிஞர்களும் அறிவர்.

நாடகக் கதைமாந்தர்

ஈடிபஸ் -தீப்ஸ் நாட்டு அரசன்
ஜொகாஸ்டா -ஈடிபஸின் மனைவி
கிரியோன் -ஜொகாஸ்டாவின் சகோதரன்
டைரீசியஸ் -குருட்டு ஞானி; அப்போலோ கோவிலின் பூசாரி
பாடற்குழு (கோரஸ்)த் தலைவன்
ஆண்டிகனி -ஈடிபஸின் மகள்
இஸ்மீன் -ஈடிபஸின் மற்றொரு மகள்
தூதன் 1
தூதன் 2
ஆடுமேய்ப்பவன்
கோரஸ் (பாடற்குழுவினர்)- ஆறுபேர். இவர்கள் தீப்ஸ் நகரப் பிரதிநிதிகள்.
இரங்கிநிற்போர் -தீப்ஸ் நகர மக்கள்
காவலாளிகள்
சேவகர்கள்

நாடகம்