இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 4

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 4
கட்டம் 3: நவதாராளமயமாக்கம், 1991 முதல்

சோவியத் கூட்டமைப்பு நாடுகளுக்கு 1989ஆம் ஆண்டைப்போல, இந்தியாவின் தாராளவாதிகளுக்கு 1991 அமைந்தது.
அதாவது அது ‘பழைய கெட்ட காலத்தின் முடிவு’ என்று பல பொருளாதாரவாதிகள் சொல்கின்றனர். இந்தியாவின் நன்கு கற்றறிந்த நவதாராளவாதியான குர்சரண் தாஸ், 1991 என்னும் ‘பொன் வசந்தத்தைப்’ பற்றி, அது
“இந்தியாவின் இரண்டாவது சுதந்திரம்….ஒரு பொருளாதாரப் புரட்சி…1947இல் நேரு தொடங்கிய அரசியல் புரட்சியை விட முக்கியமானது”
என்று நினைக்கிறார். 1991இல் இந்திய அரசாங்கம் தொடங்கி வைத்த நவதாராளவாத சீர்திருத்தங்களைக் கொண்டாடுவதற்கு, வியாபார பேரமையங்கள், பெரும்பாலான மையநீரோட்ட ஊடகங்கள், சுதந்திரச் சந்தைப் பொருளாதாரவாதிகள், இந்தியாவின் மேல்நோக்கி நகரக்கூடிய நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினர் ஆகியோர்க்கு வார்த்தைகளே இல்லை.

காங்கிரஸ் பிரதமரான (1991-96) நரசிம்ம ராவும், அவரது நிதி யமைச்சரான மன்மோகன் சிங்கும் (இவர் பின்னர் பிரதமரானார்) இந்தியாவைச் செல்வம், புகழ் ஆகியவற்றின் வேகப்பாதையில் செலுத்திய ‘புரட்சி நாயகர்கள்’ என்று புகழப்பட்டனர்.

முந்திய தலைமுறையில், மேட்டுக்குடியினர் தலைமையேற்ற நுகர்வோர் பெருக்கத்தினால் உண்டான வணிகப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி இருப்புக் குறைபாடு ஆகியவற்றுக்கு எதிர்வினையாக அமைந்தவை இந்த 1991 சீர்திருத்தங்கள். இதனுடன் 1990இன் வளைகுடாப் போரினால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வும் சேர்ந்துகொண்டது. மோசமான பொருளாதார நிலைமை, முதலீடு அந்நிய நாடுகளுக்குச் செல்வதற்குக் காரணமாகியது. அதனால் அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் பலர் தங்கள் சேமிப்புகளை இந்திய வங்கிகளிலிருந்து திரும்பப் பெற்றனர். அப்போது தான் சர்வதேசப் பணநிதி (ஐஎம்எஃப்), உலகவங்கி ஆகியவற்றிடம் பல கட்டுப்பாடுகளுடன்கூடிய கடனை இந்தியா பெறநேர்ந்தது.

அரசு-பொருளாதார உறவை முழுமையாக மாற்றியமைக்க இந்தக் கடன் ஒரு முகாந்திரமாக அமைந்தது. “இந்தியா தன் அரசாங் கத்தைப் பொருளாதாரத் தொழிலகங்களைச் சொந்தமாக வைத்திருப்பதையும் நடத்துவதையும் கைவிடவேண்டும்; அரசு மானியங்களைக் குறைக்கவேண்டும்; மேலும் சந்தை சார்ந்ததாக இந்தியப் பொருளாதாரத்தை ஆக்கவேண்டும்; சிவப்பு நாடாத் தன்மையைக் குறைக்கவேண்டும்” என்பவை கடனின் நிபந்தனை களின் ஒரு பகுதி. வழக்கமாகவே ஐஎம்எஃப்-உலகவங்கி விதிக் கும் நிபந்தனைகள்தான் இவை.

ஆனால் இந்தச் சீர்திருத்தங்களை ஓர் ஏழையான, ஆதரவற்ற இந்தியாவின்மீதான் நவஏகாதிபத்தியத் திணிப்பாகக் காண்பது தவறு. சூழ்நிலை மிகவும் சிக்கலானதாக இருந்தது. இந்தியத் தொழிலதிபர்களும் கொள்கை வகுப்போரும் இந்தச் சீர்திருத் தங்களை எதிர்க்கவில்லை. உண்மையில், அவர்கள் இந்தியர் களின் பணம் செய்யும், தொழில் முனையும், விலங்குத்தனத்தைக் கட்டவிழ்த்துவிடுவதற்குத் தேவையானதொரு ஊட்டச்சத்து ‘டானிக்’காக அதை வரவேற்றார்கள். அந்தச் சமயத்தில் உலக வங்கிக்காகப் பணிபுரிந்துகொண்டிருந்த கொலம்பியா பல்கலைக் கழகப் பொருளாதாரவாதியான அரவிந்த் பனகரியாவின் கூற்றுப்படி,
“இந்த நிறுவனங்களின் கட்டாயத்திற்கென தொடக்க தாராளமய ‘பாக்கெட்டை’ உலகவங்கி திணித்தாலும், முன்வைக்கப்பட்ட சீர் திருத்தங்கள் “இந்தியாவின் மூலத்தில் தோன்றியவை; இந்தியக் கொள்கை வகுப்போரின் ஒருமித்த மனப்பான்மையைப் பிரதிபலித் தவை.”

சர்வதேசப் பண நிதியம், உலகவங்கி ஆகியவற்றின் செல்வாக்கு செயல்பாடுகளின் முதல்கட்ட அளவில் நின்றுவிட்டது என்பது பலருக்கும் தெரிவதில்லை. 1991 டிசம்பரின் கட்டுமானச் சரிப்படுத் தல் கடனுக்குப் (எஸ்ஏஎல்) பிறகு, இந்திய அரசாங்கம் மறுபடியும் அதிகாரத்திற்கு வந்துவிட்டது”.

உண்மை என்னவென்றால், 1980களில் ராஜீவ் காந்தியின் தாராள மயச் சோதனைகள் தொடங்கி, இந்தியா அதுவரை பின்பற்றிய உள்முகநோக்குக் கொண்ட, அரசு நிர்வகித்த, பொருளாதாரப் பாதையிலிருந்து இந்தியத் தொழில்துறை விடுபடத் துடித்துக் கொண்டிருந்தது. ஏற்றுமதிச் சந்தைகளில் பங்கேற்க ஆர்வமாக வும் இருந்தது. அதற்குப் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டு தேவையாக இருந்தது. இந்திய வணிகத்தொழில்கள், தொலைத் தொடர்பு, நிதிச் சேவைகள், பங்குச் சந்தை வியாபாரம், இவை போன்ற பொருளாதாரத்தின் புதிய பகுதிகளுக்குள் நுழையவும் ஆர்வமாக இருந்தன. ஆகவே நடைமுறையில், நாட்டின் கூட்டுக்குழும(கார்ப்பரேட்)ப் பகுதி, தன்னைப் பெரிதாவதிலிருந் தும், தனியாகவோ, அயல்நாட்டுக் கூட்டுடனோ, உலக அரங்கில் பரவுவதிலிருந்தும் தடுத்துவந்த அரசுக் கட்டுப்பாடுகளை ஒழிக்கத் துடித்துக் கொண்டிருந்தது.

நரசிம்ம ராவும், ‘ஆக்ஸ்பிரிட்ஜ்’ கல்விகற்ற பொருளாதார நிபுண ரும் அவரது நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கும் ஐஎம்எஃப் – உலகவங்கி நிபந்தனைக்கட்டை ஒரு முழுமையான மாற்றத்திற் கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஹார்வர்டு எம்பிஏ வான ப. சிதம்பரத்துடனும், ஆக்ஸ்ஃபோர்டில் பயிற்சிபெற்ற புகழ் பெற்ற பொருளாதாரவாதியான மான்டெக்சிங் அஹ்லுவாலி யாவுடனும் மன்மோகன் சிங் கூட்டுச்சேர்ந்தார். இவர்கள் மூவரும் ‘கட்டுப்பாட்டு நீக்கக் கேளிக்கை’யில் ஈடுபட்டனர். பல ஆண்டுகள் கஷ்டப்பட்டுக் கட்டமைத்த சிக்கலான ஒழுங்குமுறைகளையும் சிலமணிநேரங்களில் சிலசமயங்களில், உடைத்துத் தள்ளிவிட்டனர். இரண்டு ஆண்டுகளில், ஒற்றையுரிமைகள் மீதான ஒழுங்கு முறைகளை எல்லாம் தளர்த்தியதோடு, வங்கித் துறை, விமானப் போக்குவரத்து, மின் உற்பத்தி, பெட்ரோலியம், கைப்பேசிகள் போன்ற அரசுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியார் துறைக்குத் திறந்து தாரை வார்த்துவிட்டனர். அயல்நாட்டு முதலீட்டுக்கும் 34 பெருந்தொழில்களில் பெரும்பான்மைநிலையில் அவை தானாகவே உரிமை பெறுமளவுக்குத் நாட்டைத் திறந்துவிட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக, பெருவணிகங்களுக்கும் வணிகக் குழுமங்களுக்கும் வரிகளைக் குறைத்தனர். சுங்க வரிகளையும் குறைத்தனர். முதலீட்டுச் சந்தையை பன்னாட்டு முதலீட்டாளர் களுக்குத் திறந்துவிட்டனர். இந்தியக் குழுமங்கள் அயல்நாட்டு நிதிச் சந்தைகளில் கடன் பெறவும் முதலீடு செய்யவும் அனுமதி யளித்தனர்.

இந்தச் சீர்திருத்தங்கள் யாவும் இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவு ஐஎம்எஃப்-உலகவங்கியின் சந்தை அடிப்படை வாதத்துக்கு ஒத்துச்செல்ல வைத்தன. சுதந்திர வணிகம், தடையற்ற முதலீடுகள், ஒழுங்குமுறை நீக்கம், அரசுத்துறைத் தொழில்க ளைத் தனியார் மயமாக்குதல் என்ற நவதாராளவாத ‘நற்செய்தி’யின் எல்லாக் கூறுகளையும் இந்தியக் கொள்கையாளர்கள் தழுவிக்கொண்டனர்.

நேருகாலத்திலிருந்து பாரம்பரியமாகப் பெற்ற “மனிதத் தன்மையோடு கூடிய வளர்ச்சி” என்ற பழைய சமதர்ம வாய்பாட்டை வாயளவில் சிலசமயம் கூறிவந்தபோதிலும், இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள், “சந்தைகள் நல்லவை; அரசாங்கங்கள் தீயவை; உலகச் சந்தைக்கு மாற்று இல்லை;” என்ற புதிய மந்திரங்களைப் பெற்றுக்கொண்டனர்.

“உயரும் அலைமட்டம், எல்லாப் படகுகளையும் உயர்த்திவிடும்” என்ற ஒளிமயமான நம்பிக்கை, எல்லா இடங்களிலும் செல்லுபடியாவதில்லை!

வர்க்க-சாதி நெகிழ்ச்சிக்கான தடைகள் தாண்ட முடியாத அளவு கடினமாக உள்ள இந்தியா போன்றதொரு நாட்டில் இது நிகழ்வதே இல்லை என்பதை நாம் பின்னர் காணப்போகிறோம்.

சமூகம்