தக்காளித் தோட்டம்

ஓர் இத்தாலியக் கிழவர் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் வாழ்ந்துவந்தார். ஆண்டுக்கொருமுறை அவர் தன் தோட்டத்தில் தக்காளி பயிரிடுவது வழக்கம். ஆனால் தரை கெட்டியாக இருந்ததால் அவருடைய வேலை மிகவும் கஷ்டத்தைக் கொடுத்தது. அவருக்கு உதவி செய்வது அவருடைய மகன் வின்சென்ட். ஆனால் இப்போது அவன் சிறையில் இருந்தான்.
இந்தக் கிழவர் தன் நிலையைப் பற்றித் தன் மகனுக்கு எழுதினார்: “அன்புள்ள வின்சென்ட், என்னால் இந்த வருடம் தக்காளித் தோட்டம் வைக்க முடியாதென்று நினைக்கிறேன். எனக்கு வயதாகி விட்டது. அதனால் தோட்டப்பகுதி முழுவதையும் கொத்தமுடியவில்லை. நீ இருந்தால் நிச்சயம் வழக்கம்போலவே தோட்டத்தை உருவாக்குவாய். ஆனால் என்ன செய்வது? அன்புடன், உன் தந்தை.”
அதற்கு அவர் மகனுடைய பதில் வந்தது: “அப்பா, நீங்கள் நிலத்தைக் கொத்தவேண்டாம். அங்கேதான் உடல்கள் புதைக்கப் பட்டிருக்கின்றன.”
அடுத்தநாள் விடியற்காலை நான்கு மணிக்கு அமெரிக்க உளவு நிறுவனத்தினர் வந்து தோட்டப்பகுதி முழுவதையும் கொத்திப் பார்த்தனர். அவர்களுக்கு உடல் எதுவும் கிடைக்கவில்லை.
அதே நாளன்று அவர் மகனிடமிருந்து மற்றொரு கடிதம் கிழவருக்கு வந்தது. “அன்புள்ள அப்பா, இப்போது தோட்டத்தில் பயிரிட முடியும். பயிரிடுங்கள். நான் இருக்கும் நிலையில் இதைத்தான் என்னால் செய்ய முடிந்தது. அன்புடன், வின்சென்ட்.”


சில தகவல்கள்

2015க்குரியனவாக இரண்டு பணிகள் என்னைப் பொறுத்த அளவில் நிறைவேறின. ஒன்று, அருட்தந்தை கிஸ்பர்ட் என்பார் எழுதிய சமூகவியல் நூலை மொழிபெயர்த்தமை. மற்றது, தொல்காப்பியப் பொருள்கோள் பற்றிய சிறு நூல் ஒன்றை எழுதி முடித்தமை. பொருள்கோள் பற்றிய நூல் அடுத்த மாதம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியாக இருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. சென்ற ஆண்டின் இடைப்பகுதியில் உலகத் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரின் சார்பாகப் பேராசிரியர் சதீஷ் இந்தத் தலைப்பில் என்னைப் பேச அழைத்தார். அப்போது ஏறத்தாழ இரண்டு மணிநேரம் பேசப் பட்ட குறிப்புகள்தான் இந்த நூல்வடிவம் பெற்றிருக்கின்றன.


ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 4

ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 4

(இந்தக் கட்டுரையின் முதல், இரண்டாம் மூன்றாம் பகுதிகள் சில நாட்களுக்குமுன் வெளியிடப்பட்டன. இது இறுதிப்பகுதி.)

மாற்றுக் கலாச்சாரம்

எந்தக் கலாச்சாரமும் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. மனிதன் சுதந்திரமாக வாழ இயலாத ஒரு சமூகத்தில், அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்துகொள்ள முடியாத ஒரு சமூகத்தில், என்ன விதமான கலாச்சாரம் மலரமுடியும்? ஆகவே இன்றைய ஆதிக்கக் கலாச்சாரம், மக்களின் சமத்துவத்தை அங்கீகரிக்காத கலாச்சாரம், பலரை ஏழைகளாகவும் அடிமைகளாகவும் மூடர்களாகவும் வைத்திருக்க முனையும் ஒரு கலாச்சாரம் – சிறுபான்மையினருக்கே எல்லாச் செல்வமும் என்று சேகரிக்கும் கலாச்சாரம் – பணத்தின் பெயரால் மனிதனைப் பேயன் ஆக்கும் கலாச்சாரம் நமக்குத் தேவையில்லை. நமக்கு இன்று தேவை ஒரு மாற்றுக் கலாச்சாரம்.

இன்றைய ஆளும் கலாச்சாரத்திலுள்ள, அதாவது வணிகக் கலாச்சாரத்திலுள்ள குறைகளையெல்லாம் போக்கி, யாவருக்கும் சம வாழ்வும் சந்தோஷமும் அளிப்பதற்கான அடிப்படை கொண்டதாக அது இருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு மாற்றுக் கலாச்சாரம் ஒரு சில நாட்களில், ஆண்டுகளில்கூட உருவாகிவிட முடியாது. பல ஆண்டுகளாகச் சேர்த்த தீமைகளை ஒருசில நாட்களில் அழித்துவிட முடியாது. மனித மனங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றம் அடையும்.

ஒரு மாற்றுக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமானால், அதாவது இப்போதுள்ள மதிப்புகள் அடியோடு மாறவேண்டுமானால், முதல் உலக, இரண்டாம் உலக நாடுகளின் இருவித பாதிப்புகளிலிருந்து நாம் விடுபடவேண்டும். ஒன்று, அவற்றின் பொருளாதார பாதிப்புகள். இரண்டு, அவற்றின் கலாச்சார மதிப்புகள். மேற்கத்திய கலாச்சார மதிப்புகளுக்குப் பதிலாக நமது சொந்தமான கலாச்சார மதிப்புகளில் பயன் உள்ளவற்றை நாம் மீட்டெடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கான கல்வி ஆயத்தம், மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தல், இரு தளங்களில் செயல்பட வேண்டும். பெரும்பாலான மக்கள் கல்வியறிவும் சிந்தனா சக்தியும் பெறும்போது அவர்களை ஏமாற்ற, ஒடுக்க எவராலும் இயலாது. அதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி நல்கும் முயற்சிகள் பெருமளவில், குறிப்பாகக் கிராமப்புறங்களில் நடைபெற்று வர வேண்டும்.

இன்னொரு தளத்தில் ஆள்வோருக்கு அறிவு புகட்டலையும் அவர்களது ஆதிக்க முயற்சிகளுக்கு எதிர்ப்பையும் மேற்கொண்டு வருதல் வேண்டும். ஆள்வோரும் மக்களே. அவர்களது மனமாற்றமும் இன்றியமையாதது. உதாரணமாக இன்று சர்வதேச அரங்கில் போரின்றி இருத்தல், சிறுபான்மை இனங்களை மதித்தல் போன்ற வற்றைச் செய்ய மக்களின் விழிப்புணர்ச்சி மட்டும் போதாது. இந்திய மக்கள் எவ்வளவுதான் இராணுவச் செலவைப் பற்றி வருந்தினாலும், ஆட்சியிலுள்ளவர்கள், பாகிஸ்தான் படை பலத்தைப் பெருக்குகிறது, சீனா பெருக்குகிறது என்பது போன்ற காரணங்களைக் காட்டித் தங்கள் படைபலத்தைப் பெருக்கவே செய்வர். அமெரிக்கா போன்ற ஆயுதவளர்ச்சி நாடுகள் இம்மாதிரிப் போக்கை ஒவ்வொரு நாட்டிலும் தூண்டிவிடத் தான் செய்யும். ஆகவே இதற்கு சர்வதேச அரங்கில், அனைத்து ஆள்வோருக்கும், குறிப்பாக முதல் உலக ஆள்வோருக்கும் விழிப்புணர்ச்சி இன்றியமையாதது. அனைவருமாகச் சேர்ந்துதான் படைக்கலங்களும் இராணுவமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வரமுடியும். இப்படி ஆள்வோர் தாமாக முடிவெடுக்கும்போது அவர்களுக்குச் சொந்த நலனைவிட நாட்டுநலன் முக்கியம் என்னும் விழிப்புணர்ச்சி அவசியமானது. இதற்கு மாற்றுக் கலாச்சாரச் சாதனங்கள், வெகுஜனச் சாதனங்கள் மிக முக்கிய மானவை. வெகுஜனச் சாதனங்களை மாற்றுக் கலாச்சாரத்தினர் கைப்பற்றினாலொழிய இன்று தேவைப்படும் மாற்றங்கள் நிறைவேறுவதற்கு வழியில்லை.

அழிந்துவரும் கலைகள்

ஒரு வணிக, மேற்சாதிக் கலாச்சாரக் கும்பல் மக்களை ஏமாற்றுவதைக் காண்கிறோம். இதனால் ஏற்பட்ட சீரழிவு, வாழ்க்கையின் அத்தனை துறைகளையும் பாதித்திருக்கிறது. மரபுரீதியாக வந்த பழக்க வழக்கங்கள், கலைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு கள், மருந்துகள், நம்பிக்கைகள் போன்ற அனைத்தும் இன்றைய வணிகக் கலாச்சாரத் தின் கீழ் நொறுங்கிவிட்டன. மாற்றாக நமக்கு எதிரில் முன்வைக்கப்படுவன அமெரிக்க முன்மாதிரிகள் அல்லது ரஷ்ய முன்மாதிரிகள். நமக்கென ஒன்றும் இல்லாமல் எல்லாவற்றையும் இழந்து விட்டதான ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தையும் காப்பாற்றியிருக்கவேண்டியது காலனி யாதிக்கத்திலிருந்து நம்மை விடுபடத் து£ண்டிய தலைமை. ஆனால் இவர்கள் வெளிநாட்டு முன்மாதிரிகையே சார்ந்து விட்டார்கள். நமது பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் அநேகமாக அழிந்துவிட்டன. நாட்டுப்பாடல்களைத் தேடி கிராமம் கிராமமாக அலைந்தாலும் கிடைப்பது அரிதாக உள்ளது. தாலாட்டுப்பாடித் தங்கள் குழந்தைகளைத் தூங்கவைத்த தாய்மார்வம்சம் இன்று டேப்ரிகார்டரில் சினிமாப்பாட்டுகளைப் போட்டுக் குழந்தைகள் அழுகையை அடக்கும் காலமாக மாறிவிட்டது.

நமது பாரம்பரிய விளையாட்டுக்கலைகள்-சிலம்பம், வர்மக்கலை போன்றவை அழிந்து வருகின்றன. அதற்கு பதிலாக கராத்தேவையும் குங்ஃபூவையும் இரவல் வாங்கி அலைகிறோம். அவையும் திரைப்படங்களில் கவர்ச்சியோடு புகுத்தப்பட்டதனால். நம் கிராமங்களில் உடலுழைப்புக்கேற்ற கூழ் களி போன்ற சத்துள்ள உணவு வகைகள், நீராகாரம் உண்ணுதல் போன்ற பழக்கங்கள், ஒரு தலைமுறைக்குமுன் இருந்தவை இன்று கேவலமாகக் கருதப்படுகின்றன. எவையெல்லாம் நம் உடல் வளத்துக்கு இசைய நல்ல பண்புகளாக இருந்தனவோ அவறைறயெல்லாம் இழந்துவிட்டு, காப்பி, டீ, புகையிலை, சிகரெட், குடி போன்ற பழக்கங்களைக் கைக்கொண்டு அலைகிறோம். மேகி, ரஸ்னா கலாச்சாரம் நம் குழந்தைகளுக்கு வந்துவிட்டது. நம் இளைஞர்கள் போதை மருந்துகளைத் தேடிச் செல்கிறார்கள்.

————————————
மேற்குப் பண்பாட்டின் ஆதிக்கமானது மூன்றாம் உலக மக்கள், தங்கள் சொந்தப் பண்பாடிலிருந்தும் மரபுகளிலிருந்தும் முகம் திருப்பிக்கொள்ளுமாறு செய்திருக்கிறது. மேற்கு நாட்டுச் செல்வாக்குள்ள புத்தகங்களும் பத்திரிகைகளும் சந்தையில் குவிந்துள் ளன. ஒரு வலுவான பண்பாட்டு மரபின் இடத்தை ஒரே முகம் கொண்ட, நுகர்வை யே நோக்கமாகக் கொண்ட ஒரு பண்பாடு பிடித்துள்ளது.
———————–

நமது சொந்தமான இசை மரபுகள், நாட்டியம், கூத்து ஆகியவையும் வறண்டு விட்டன. கர்நாடக இசை ஒரு சிறு மேற்குழுவிடம் சேர்ந்ததன் காரணமாகத் தெலுங்கு இசையாக மாறிவிட்டது. இதனால் அது பரவலாகக் கூடிய அரிய வாய்ப்பை இழந்து விட்டது. தெலுங்குப் பாடல்களை அர்த்தமற்றுப் பாடும் வித்வான்களிடம் தன் ஜீவனை வெறும் தொழிலாகிவிட்டது. இதற்கும் மேலாக வாய்பாடுகள் போல ஸ்வரக் கோவைகளை உதிர்த்தல், குரல் வளமின்மை போன்ற கோளாறுகள் காரணமாகவும், சமூகச் சார்பின்மை காரணமாகவும் தேய்ந்து வருகின்றன. மாற்றுநிலையில், நமது மக்கள் திரைப்படப் பாடல்களுக்கு ஒரேமூச்சாக அடிமைப்பட்டுவிட்டனர். நாட்டார் பாடல்களோ கேவலம் எனக் கருதப்பட்டு வெகுஜனச்சாதனங்களில் இடம் பெறுவது அரிதாகிவிட்டது. நாட்டியம் இசையின்றி இயங்கமுடியாத துறையாக இருப்பதால், இசையை அடிமை கொண்டவர்களுக்கே தானும் அடிமையாகிவிட்டது. இன்று பரத நாட்டியம் வெறும் உடற்பயிற்சிபோல அர்த்தமற்று நிகழ்த்தப் படுகிறது. மேலும் கடவுளைப்பாடுதல், காமத்தை அபிநயித்தல் என்ற துறைகள் தவிர (பாரம்பரியத்தைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றே) வேறு பரதநாட்டியத் துறைகள் அறவே இல்லை. ஆகவே பரதநாட்டியம் இன்று வெறும் காம அங்க அசைவுகளை மட்டுமே கொண்ட ஒரு செயற்கையான பயிற்சியாகிவிட்டது.
இந்தக் கலைகளின் நலிவைப் பற்றிய பிரக்ஞைகூட இல்லாமல் ஏதோ உன்னதம் போல செயற்கையாக வானொலி, தொலைக்காட்சி, (ஜனரஞ்சகமான முறையில்) திரைப்படம் ஆகியவற்றில் இடம் பெற்று வருகின்றன. இவற்றைப் பற்றிய கவலையையும் முதலாளித்துவ நச்சுவளையம் கவர்ந்துகொண்டு விட்டது.
இலக்கியமும் இன்றைய கலாச்சார நலிவிலிருந்து தப்பிக்கவில்லை. வெகுஜனச் சாதனங்களின் ஆதிக்கம் கவியரங்குகள், பட்டிமன்றங்கள் என்று மக்களைக் கவரும் விஷயங்களாக மாறிவிட்டது. வயிற்றுப் பிழைப்பே பிரதானம் என்றும், பணமே முக்கியம் என்றும் கருதும் வணிகக் ‘கவிஞர்கள்’ பலர்-மேத்தா, வைரமுத்து என்று உருவாகி விட்டனர். மரபின் அழிவுக்கு எதிராகக் கொடிபிடித்த புதுக்கவிதை வெறும் அலங்காரச் சொற்குவியலாக, துதிபாடுவதாகத் தேய்ந்துவிட்டது. இதை எதிர்க் கும் வன்மை மிகச் சிறுபான்மையாக உள்ள கலாச்சார விழிப்புக் கொண்டோரிடம் இல்லை. இன்றைய மாணவர்களோ நாவல்கள் என்றால் ராஜேஷ்குமார் முதல் அனுராதா ரமணன் வரை பல பெயர்களைச சொல்கிறார்கள், தப்பித் தவறிக்கூடி நல்ல நாவலாசிரியர்கள் பெயர்கள் அவர்கள் கண்ணிலும் காதிலும் படுவதில்லை. நாடகமோ சபாக்காரர்களிடம் தஞ்சமடைந்து வெறும் துணுக்குத் தோரணங்கள் ஆகி விட்டது.

மாற்றுக் கலாச்சாரக் கூறுகள்

சுயநலம், பொருளாசை, சிந்தனையை மழுங்கடிப்பது, மற்றவர்களை அடிமைப்படுத்துவது-இவை ஆதிக்கக் கலாச்சாரத்தின் பண்புகள். இவற்றுக்கு எதிரானவை மாற்றுக் கலாச்சாரக் கூ.றுகள். அடித்தட்டு மக்களின் கலாச்சாரத்தில் மாற்றுக் கலாச்சாரப் பண்புகளை அதிகம் காணமுடியும். எனவே மாற்றுக் கலாச்சாரம் என்பதை அடித்தட்டு மக்களின் கலாச்சாரத்திலிருந்து தொடங்கவேண்டும். இந்தக் கலாச்சாரக் கூறுகளும் அழிந்து கொண்டிருந்தாலும், ஒரு சில இடங்களிலேனும் இவற்றை இன்னும் காணமுடிகிறது.

குழுச்செயல்பாடு

மக்கள்-குறிப்பாக அடித்தட்டு மக்கள்-தனித்தனி குடும்பமாக வாழ்ந்தாலும் தாங்கள் வாழும் கிராமத்தில் அல்லது பகுதியில் ஒரு குழுவாகவே செயல்படுகின்றனர். ஒரு வீட்டில் திருமணம் என்றால் சுற்றியிருப்பவர்கள் தங்கள்வீட்டுத் திருமணமாக அதை நினைத்து உதவுகின்றனர். திருமண வீட்டை அலங்கரிப்பது, உணவு தயாரிப்பது, பரிமாறுவது, திருமணத்திற்கு வருபவர்கள் தங்கவும் உணவுகொள்ளவும் தங்கள் வீடுக ளை ஒதுக்கித் தருவது எனப் பலவகைகளில் தங்களையும் அவர்களோடு இணைத்துக் கொள்கின்றனர்.
சாவுபோன்ற துக்கக் காரியங்களில் சுற்றி உள்ளவர்கள் அந்த இழப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். தகவல் கொடுப்பது, இறுதிச் சடங்கு ஏற்பாடு, சாவு நிகழ்ந்த வீட்டில் வந்தவர்களுக்கு உணவு தயாரித்துவந்து கொடுப்பது இவ்வாறு துக்கத்தில் உள்ளவர்க ளுக்கு ஆறுதல் அளிக்கின்றனர். ஆலய விழாக்களை ஊரே கூடி ஊர்த்திருவிழாவா கக் கொண்டாடுகின்றனர். திருவிழாவுக்கான செலவுகளையும் வரிசெலுத்திப் பகிர்ந்து கொள்கின்றனர். திருவிழா அன்று ஒரே இடத்தில் ஊர்முழுவதற்கும் சமையல் செய்து சமபந்தியாக அனைவரும் உண்கின்றனர். (உதாரணம், முத்தழகுப்பட்டி செபஸ்தியார் திருவிழா).

இராமநாதபுரம் மாவட்டத்தில் சில கிராமங்களில் பதிலாள்முறை பின்பற்றப்படுகிறது. ஒருவருடைய வயலில் நாற்றுநடுதல் அல்லது அறுவடை போன்ற வேலைகள் இருக்கும்போது மற்றவர்கள் அவர் வயலில் வேலைசெய்வார்கள். இதுபோன்று ஒவ்வொருவருக்கும் வயல்வேலைகள் இருக்கும்போது மற்றவர்போய் அங்கு வேலை செய்வது வழக்கமாக உள்ளது. இம்மாதிரியான குழுச் செயல்பாடுகளில் பொதுநலம் காணப்படுகிறது. மற்றவர்களை மனிதனாக மதிக்கும் சமத்துவநோக்கும், ஜனநாயகப் பண்பும் அதிகம் இடம்பெறுகின்றன. சாதி சமய பொருளாதார வேறுபாடுகள் பின்தள்ளப்படுகின்றன. மக்கள் சக்தியின் பலம் வெளிப்படுகிறது.

கலைகள்
அடித்தட்டு மக்களின் கலைகள் எளியவை, அனைவரும் பங்கேற்கக்கூடியவை. இதற்கு உயர்கலைகள் போல் வருடக்கணக்கான தனிப்பயிற்சி தேவையில்லை. மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும்படி யதார்த்தமாகவும் உள்ளன. கும்மி, ஒயிலாட்டம் போன்றவை எல்லா மக்களும் கலந்துகொள்ளும் எளிய வடிவங்கள். திருமணச் சடங் கின்போது பாடப்படும் பாடல்கள், ஒப்பாரி, வயல்களில் வேலைசெய்யும்போது பாடும் பாடல்கள் போன்றவை குழுவாக அனைவரும் சேர்ந்து பாடுகின்றவை. தங்களது சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்ளும் முறையிலும் உள்ளன. மக்களுக்குத் தீங்கு செய்பவர்களையும் ஆதிக்க சக்திகளையும் ஒழிக்கவேணடும் என்ற கருத்துடைய மதுரைவீரன் கதை அண்ணன்மார் கதை போன்றவை கூத்தாகவும் நாடகமாகவும் நடத்தப்படுகின்றன.

அடித்தட்டு மக்களின் கலைவடிவங்களுக்கு அதிக பொருட்செலவும் நீண்ட பயிற்சியும் தேவையில்லை எனவே எல்லா மக்களும் இக்க¬ல் வடிவங்களில் பங்கேற்கவும் இவற்றைச் சொந்தமாகக் கொள்ளவும் முடிகிறது. வட்டமாக நின்று பலசமயங்களில் நிகழ்த்தப்படுவதால் இவற்றில் யாருக்கும் கூடுதல் மதிப்பு கிடையாது, சம மதிப்புதான் உண்டு. மக்கள் அனைவரும் கூடிப் பார்வையாளர்களாக இருந்தாலும் அவர்கள் பங்கேற்கவும் முடியும். தனிமனிதவாதம் இவற்றில் இல்லை. கலைகளில் உள்ளடக்கம் யதார்த்தமாக இருப்பதால் மூளையை மழுங்கடிப்பதில்லை. மக்களின் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையை எழுப்புகின்றன. நடத்துவோரும் பார்வையாளரும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இடமளிக்கும் இக்கலைகள் ஜனநாயக வடிவங்களாக உள்ளதைக் காணமுடிகிறது.

நகர்ப்புற நடுத்தர வர்க்கச் சிந்தனையாளர்கள் சிலரால் அடித்தட்டு மக்களின் கலை வடிவங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, கூத்தாகவும், பூமிநாடகமாகவும் விழிப்புணர்வுப் பாடல்களாகவும் மறுவடிவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. அடித்தட்டு மக்களன் கலாச்சாரத்தில் அடிமைத்தனக் கூறுகளும் சில உள்ளன. அவற்றை நீக்கிவிட்டு சமத்து வமன சமுதாயத்தை உருவாக்குவதற்கான கலாச்சார அம்சங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாற்றுக் கலாச்சாரத்தை வலியுறுத்தக்கூடிய, அதற்குத் தேவையான கருத்துகளை அளிக்கக்கூடிய திரைப்படச் சங்கங்கள் தோன்றி வருகின்றன. சோதனை முயற்சியாக நாடகங்கள், திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை ஊக்குவிக்க வேண்டும். சமபங்கீடு இல்லாததால் காணப்படும் ஏற்றத்தாழ்வான, அநீதியான சமூக அமைப் பைக் கட்டிக்காக்கும் கலாசசாரக் கூறுகளான மதம், கல்வி, கலை, இலக்கியங்கள் ஏற் றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும்படி மாற்றப்பட வேண்டும்.

சமய இயக்கங்கள்

பொதுவாக மதங்கள், பௌத்தம், கிறித்துவம், இஸ்லாம், சித்தர் வழிமரபு, தமிழ்ச் சைவம், தமிழ் வைணவம், வீரசைவம், காஷ்மீர சைவம், அய்யாவழி போன்றவை-அன்றன்றைக்கு இருந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் தோன்றியவையே. இவற்றை உண்மையில் மக்கள் இயக்கங்களின் தொடக்கம் என்று கூறலாம். நாளடைவில் இந்த இயக்கங்கள் ஆதிக்க அமைப்புகளால் சிறைப்பிடிக்கப்பட்டு, சாரம் அற்றுப் போயின. ஆனால் முழுமையாக மழுங்கடிக்கப்பட்டன என்று சொல்லமுடியாது. சான்றாக ஒரு சில மதங்களின் தோற்றங்களைக் காணலாம்.

பௌத்தம்: வேதகாலத்தில் சாதியும் யாகச்சடங்குகளும் பெரிய அமைப்புகளாக உருவெடுத்தன. சாதி அமைப்பிற்கும் சடங்கு வழிபாட்டு முறைக்கும் எதிராகத் தோன் றியது பௌத்தம். சமூகக் கொடுமையான சாதியை எதிர்த்து சகோதர உணர்வை வலி யுறுத்தியது. பௌத்த இயக்கத்தில் வழிபாடோ குருக்களோ இல்லை. அன்பு முதன்மை யாக்கப்பட்டது.
ஆனால் வேதங்களுக்கு எதிராக எழுந்த பௌத்த இயக்கம் பிற்காலத்தில் உபநிடதங்க ளால் உள்வாங்கப்பட்டது. பொருளாதார அமைப்பு நிலவுடைமை சார்ந்ததாக மாறிய தால் வணிகரின் சமயமான இது மழுங்கிப்போயிற்று. புத்தர் கடவுளாக்கப்பட்டு விஷ்ணுவின் அவதாரம் ஆனார்.

இஸ்லாம்: மெக்கா வியாபார மையமாகியது. அங்கிருந்த மக்கள் ஆதிக்க சக்திகளால் பயன்படுத்தப்பட்டனர். ஏழை பணக்காரன் வேறுபாடு கூர்மையாகியது. இந்தக் காலத் தில் தோன்றிய நபி, ஏற்றத்தாழ்வைக் கடவுள் எதிர்க்கிறார் என்றும், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார். சகோதரத்து வத்தை முக்கியமாக அவர் வலியுறுத்தினார். பின்னர் வந்தோர் இதை நிறுவனச் சமய மாக மாற்றியதோடு தீவிரவாதத் தன்மையை இணைத்துவிட்டனர்.

கிறித்துவம்: மதத்தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் போன்றவர்களால் இரட்டை ஒடுக்கு முறை நிலவி வந்த காலத்தில் இயேசு தோன்றினார். இந்த இரு ஒடுக்கு முறைகளை யும் எடுத்தெறிந்து சமத்துவ சமுதாயத்தை (இதை இறையரசு என்றார்) உருவாக்க முயற்சி செய்தார். இயேசுவுக்குப் பின்னும் அவரது இயக்கம் ஏழைகளின் இயக்கமாக வே இருந்தது. ரோமில் அடிமைகளின் இயக்கமாகவும் இருந்தது. நான்காம் நு£ற்றாண் டில் கான்ஸ்டான்டின் பேரரசன் கிறித்துவனாகியபோது கிறித்துவமும் ஆதிக்க மதம் ஆகியது.
இன்று இந்திய அளவிலும் தமிழக அளவிலும் நாம் காணும் கலாச்சாரங்கள் நம் மீது திணிக்கப்பட்டவையே. ஆரியர், பிராமணர், கிரேக்கர், ரோமானியர், அராபியர், இஸ்லாமியர், ஐரோப்பியர் ஆகியோரது பண்பாட்டுப் படையெடுப்புகள் நமது பண்பாட்டைச் சீரழித்து ஆதிக்க சக்திகளுக்கு உதவியாக மாற்றியுள்ளன. நாம் இழந்த மாற்றுக் கலாச்சாரக் கூறுகளைத் தமிழ்ப்பண்பாட்டிலிருந்தே தேடி எடுத்துப் பெற்று சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம், மக்கள் கலாச்சாரத்தைக் காப்போம்.


ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 3

ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 3

(இந்தக் கட்டுரையின் முதல், இரண்டாம் பகுதிகள் சில நாட்களுக்குமுன் வெளியிடப்பட்டன. இது மூன்றாவது பகுதி. திரைப்படங்கள் முதல், ஆதிக்கக் கலாச்சாரத்தின் பொருளாதாரக் கூறுகள் வரை இதில் இடம்பெறுகின்றன. நான்காம் இறுதிப்பகுதி மாற்றுக் கலாச்சாரம் பற்றியது.)

திரைப்படங்கள்
—————
வெகுஜனச் சாதனங்கள், குறிப்பாகத் திரைப்படம், தொலைக்காட்சி இரண்டும்-போலியான தேவைகளை உருவாக்குகின்றன. ஒற்றைப் பரிமாணச் சிந்தனையை உருவாக்குகின்றன. மக்களை இயல்பாகத் தங்கள் பணிகளிலும் சமூக உறவுகளிலும் ஈடுபடமுடியாதவாறு செய்கின்றன. இன்றைய சமூகம், மனிதத்தன்மையை அற்றுப் போகச் செய்து, மனிதர்களை அந்நியப்படுத்துகின்றன. நவீன தொடர்புச் சாதனங்கள் மக்கள் வாழ்க்கையிலுள்ள குறைகளை மறைக்க அல்லது தங்களையே மறந்துபோக உதவி செய்கின்றன.
-ஹெர்பர்ட் மார்க்யூஸ், ஒற்றைப் பரிமாண மனிதன்.
————————————
திரைப்படம் போன்ற வெகுஜனச் சாதனங்கள், நமது யதார்த்த வாழ்வைவிட நாடகப் பாங்கானவையாகவும், உள்ளக்கிளர்ச்சி தருபவையாகவும் உள்ளன. மக்களை ஹீரோ அல்லது முக்கியப் பாத்திரத்துடன் எளிதில் ஒன்றிவிடச் செய்கின்றன. நமது சமூகத்தில் சினிமாவில் காட்டப்படுவது போன்ற கடற்கரையில், பூங்காக்களில் ஆடிப் பாடும் காதல், தீயவர்களை அடித்து நொறுக்கும் அடிதடிச்சண்டைகள் போன்றவை இல்லாதவை. திரைப்படங்களில் இவற்றை கனவாகக் கண்டு மக்கள் தங்களை மறக் கின்றனர். பெண்ணின் உடல் ஆணுக்கு அந்நியப்படுத்தப்பட்ட இந்தச் சமூகத்தில், திரைப்படங்களில் வரும் நெருக்கமான காதல்காட்சிகள் ஆட்டக் காட்சிகள் போன்றவை இரசிகர்களால் விரும்பப்படுவதில் ஆச்சரியமில்லை. பெண்ணின் தோழமை மறுக்கப்பட்டு, நுகர்பொருளாக்கப்பட்ட சமூகத்தில், பெண்மையத் திரைப்பட வியாபாரம் செழிப்பதில் வியப்பேது?
திரைப்படங்களின் அபாயம், அவை தரும் படிமங்களை மக்கள் உண்மை என நம்ப வைப்பதில் உள்ளது. எனவேதான் தி¬ப்படம் சார்ந்த எல்லாருமே தங்கள் இமேஜ் பற்றிக் கவலைப்படுகிறார்கள். (அந்த இமேஜைப் பின்னர் அரசியலிலும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்). திரைப்படங்கள் நமது புலனுணர்வுகளை உண்மையிலிருந்து பொய்யைப் பிரித்துக்காண முடியாத விதத்தில் குழப்பிவிடுகின்றன. நமது அரசியலை இத்தகைய பொய்ம்மை தீர்மானிப்பதில் பெரும்பங்கு கொள்கிறது. நம் திரைப்படங் கள் யதார்த்தம் என்ற பெயரில் மீயதார்த்தத்தை, கனவை வியாபாரமாக்குகின்றன. மற்றப்படி விளம்பரங்களுக்குச் சொன்ன அனைத்தும் திரைப்படங்களுக்கும் பொருந்தக்கூடியவையே. ஒளிந்திருந்து அல்லது மறைவிலிருந்து பார்க்கும் காட்சி-gaze என்ற முறையில் இதனை விரிவாக நோக்கவேண்டும். திரைப்படத்தைப் பற்றி இன்னும் விரிவாக, தனியாக வேறிடத்தில் பேசுவோம்.

போஸ்டர் கலாச்சாரம்

திரைப்பட, அரசியல் துறைகளோடு தொடர்புடைய, நம் கலாச்சாரச் சீரழிவை எடுத்துக்காட்டும் இன்னும் இரு சாதனங்கள் வீடியோக் காட்சிகளும் போஸ்டர்களும். போஸ்டர் கலாச்சாரம் உலகிலேயே, இந்தியாவிலேயே, தமிழகத்துக்குத்தான் அதிகம் உரியது. இங்குதான் அரசியல்வாதிகள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது முதற் கொண்டு திரைப்பட விளம்பரம் வரை போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. பூப்படைந்தால் போஸ்டர், செத்துப்போனாலும் போஸ்டர், வெளிநாடு சென்றால் போஸ்டர், எல்லாவற்றிற்கும் போஸ்டர். பலவண்ண, ஆளுயர போஸ்டர்கள் அடித்து ஒட்டப்படுகின்றன. இவற்றின் ‘முன்னேற்றம்’தான் கட்அவுட்டுகள் வைப்பது, அலங்கார வளைவுகள் வைப்பது முதலியவை. இவை பொதுமக்களுக்குத் தரும் இடைஞ்சலுக்கு அளவே இல்லை என்றாலும் சுரணையிருப்போரும் நமக்கெதற்கு வம்பு என்று ரௌடியிசத்திற்கு பயந்து சகித்துக்கொண்டு போகவேண்டியிருக்கிறது. இவர்களால் நாசமாகும் சாலைகளுக்கு அளவே இல்லை. போக்குவரத்து நெரிசல்களுக்குக் குறைவே இல்லை.

வீடியோக்களும் ஒலிபெருக்கிகளும்
வீடியோக்களுடன் சேர்ந்து பார்ககவேண்டியது ஒலிபெருக்கி. நமது கிராமங்களின் திருவிழாக்களிலும் இவை இரண்டுமே இப்போது நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டன. ஒரு காலத்தில், சமூக உறவுக்கு அடிப்படையாகத் திருவிழாக்கள் இருந்தன. திருவிழாக் களைப் பொறுத்தவரை, ஏறத்தாழ பதினைந்து இருபதாண்டுகளுக்கு முன்புவரை, உயர்சாதியினர், மத்தியதரத்தினர், ஒடுக்கப்பட்ட வகுப்பினர் என்று அனைத்து வகுப்பி னரின் பங்கேற்பும் திருவிழாவில் இருந்தது. திருவிழா நடக்கும் இரவுகளில் தெருக்கூத்து அல்லது நாட்டுப்புறக் கலைகள் இடம்பெறுவதும் இயல்பாக இருந்தது. இன்றோ திருவிழாக்களின் முந்திய நாட்களிலிருந்து முடிந்த மறுநாள் வரை ஓயாமல் ஒலிபெருக்கிகள் ஆபாசமான பாட்டுகளை அலறிக்கொண்டே இருக்கின்றன. இவற்றுடன் இரவுகளில் தெருக்கூத்து போன்ற கலைகளுக்கு பதிலாக ஆபாச நடனங் கள் வேறு.
இந்த ஒலிபெருக்கிகள் ஏதோ ஓரிடத்தில் இருந்தால் பரவாயில்லை. அனைவர் காதையும் மனத்தையும் கெடுத்துக்கொண்டு, திருவிழா நடக்கும் கோயிலிலிருந்து வரிசையாகத் தெருவுக்குத் தெரு எனப்பல தெருக்களில் கோடிவரை தொடர்ச்சியாகக் கட்டப்பட்டிருக்கும். இவற்றின் ஒலித்தொல்லையிலிருந்து எவரும் மீளமுடியாது. இம் மாதிரித் தொல்லைகளால் திருவிழாக்களில் அநேகமாக மேல்சாதியினர் பங்கேற்பு அறவே இல்லை என்று சொல்லும் அளவுக்குக் குறைந்துபோய்விட்டது. படித்தவர்கள் இம்மாதிரித் திருவிழாக்களைப் பொருட்படுத்துவதே இல்லை. முழு அளவுக்கு (சாதியி லும் பொருளாதாரத்திலும்) தாழ்ந்த மக்களுக்கெனவே என ஆகிவிட்ட இத்திருவிழாக் களின் முக்கிய அம்சம், ஆபாச நடனங்கள், திரைப்படப் பாடல்களின் மறு நிகழ்வுகள், தெருக்கள்தோறும் வீடியோக்காட்சிகள். ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் இரண்டு மூன்று படங்கள். மக்களின் பொதுப் பங்கேற்பைக் குறைத்து, கனவுத்தன்மையை வளர்ப்பனவாகவே இவையும் அமைகின்றன. வீடியோக்காட்சிகளின் ஒலிவடிவமும் ஒலிபெருக்கியில் இணைக்கப்பட்டு அது எல்லார் து£க்கத்தையும் கெடுத்துக்கொண்டு ஊர்முழுவதும் அலறவேண்டும்.
நகரங்கள் கிராமங்கள் என்ற வேறுபாடின்றி மத்தியதரவர்க்கத்தினரை வீடியோ பாதிக் கிறது. இவை வாயிலாக விடுமுறை நாட்களில் மூன்று நான்குக்குக் குறையாமல் திரைப்படங்கள். (மற்றக் குடும்பங்களிடம் கட்டணம் வசூலித்துக்கொண்டு அவர்களை யும் அனுமதிப்பதும் நடக்கிறது). இவை விற்கும் கனவுகளைப் பற்றிய கவலைகள் ஒரு புறம் இருக்க, அடியோடு மானிட உறவுகள் அற்றுப்போக இவை வகைசெய்கின்றன.
திரைப்படங்கள் மடடுமன்றி, கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்றவற்றின் போட்டிகளும் இடையறாது நமது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இப் போட்டிகளிலும், திரைப்படங்களிலும் காணக்கூடிய அதே அளவு சுவை, போராட்டம், ஒன்றுதல் ஆகியவை உள்ளன. ஒரு மசாலாத்தனமான திரைப்படம் தரும் ஒன்றுதலை விட ஒரு கிரிக்கெட் ஆட்டம் தரும் ஒன்றுதல் எவ்விதத்திலும் குறைவானதல்ல. செயலற்ற இரசிகர் கூட்டமொன்றை இவை உருவாக்கிவிடுகின்றன. ஒரு கிரிக்கெட் போட்டியின்போதோ ஞாயிற்றுக்கிழமை திரைப்படத்தின்போதோ வீடியோ காட்சிக ளின்போதோ ஒலியும் ஒளியும் நடைபெறும்போதோ விருந்தினர் வந்துவிட்டால் அவ்வளவுதான். தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாடெல்லாம் பறந்துபோய் ஒலியும் ஒளியும் பண்பாடு நிலைத்துவிட்டது.

——————–
மக்களின் பங்கேற்பினை ஊக்குவிக்கின்ற, மகிழ்ச்சியையும் நேச உணர்ச்சியையும் வளர்க்கின்ற உள்நாட்டு விளையாட்டுகளை வளர்க்கவேண்டும். அதேசமயத்தில் மனித மதிப்புகளை முற்றாகப் புறக்கணித்து, போட்டியை மட்டுமே வலியுறுத்துகின்ற, வெற்றி கரமான விளையாட்டு வீரர்களை மட்டும் புகழுச்சியிலே வைக்கின்ற, தலைமை வழிபாட்டை வளர்க்கின்ற நவீன விளையாட்டுப் பந்தயங்களுக்கு ஊக்கம் தரக்கூடாது.
——————————————-

மந்தைச் சிந்தனை
வீடியோ, திரைப்படக் கலாச்சாரத்தோடு சம்பந்தப்பட்ட மற்றொரு விஷயம், இரசிகர் சங்கங்கள். வேலையற்றுத் திரியும் படிக்காத கிராமத்து இளைஞர்களும், நகரங்களில் படித்தும் படிக்காமலும் வேலையற்றிருக்கும் இளைஞர்களும் இச்சங்கங்களின் ஆணி வேர்கள். ஆனால் இவற்றின் தலைவர்கள் நடிகர்களால் ஏவப்படும் சுயநலமிகள். பெரிய பெரிய கட்அவுட்டுகள் வைப்பது, மோசமான திரைப்படங்களையும் பாராட் டிப் போஸ்டர்கள் ஒட்டுவது, முதல் காட்சியைப் பார்ப்பது, விநியோகஸ்தரிடமிருந்தே பலத்த ஆரவாரத்தோடு படப்பெட்டியைக் கொண்டுவந்து பூசைபோடுவது, படம் நடக் கும்போது இஷ்ட தெய்வமான கதாநாயகனுக்குச் சூடம் சாம்பிராணி கொளுத்துவது, படம் கொஞ்சம் நன்றாக இருந்துவிட்டால் பட்டாசுகள் வெடித்து வெற்றிவிழா கொண்டாடுவது போன்றவை இவர்களது முக்கியச் செயல்கள். எந்தவிதமான ‘டீசன்சி’க்கும் அப்பாற்பட்ட விதத்தில் இவர்களது நடத்தை அமைகிறது. தங்கள் இஷ்ட தெய்வ நாயகனுக்காக எதிர்நாயகன்கள் போஸ்டர்கள்மேல் சாணி எறிவதிலிருந்து அந்த ரசிகர்களோடு சண்டையில் ஈடுபடுவதுவரை இவர்களது வீரச்செயல்கள் தொட ரும். இந்த ரசிகர் மன்றங்களே கட்சி அரசியலுக்கும் அடிப்படை. ஹீரோ ஒர்ஷிப் எனப்படும் நாயக வழிபாட்டின் பச்சையான வெளிப்பாடு இது. இம்மாதிரித் தனிநபர் வீரவழிபாடு, ஜனநாயகத்துக்கு வெகுமுரணானது. மந்தைச் சிந்தனையைத் து£ண்டக் கூடியது. ஒற்றைப் பரிமாணச் சிந்தனை என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் குறிப்பிடுவது இத்தகைய வீரவழிபாட்டு முறையினைத்தான். ஆனால் இதற்கு அடிப்படைக் காரணங் கள் நமது பாடப்புத்தகங்களும் பிற சாதனங்களுமே. சான்றாக, அவை “காந்தியடிகள் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்தார்” என்பதுபோன்ற விஷயங்களால் தனிநபர் வழிபாட்டையே வளர்க்கின்றன.

தனிநபர்களுக்காகக் கட்சி, தனிநபர்களுக்காகவே இரசிகர் மன்றங்கள், தனிநபர்களுக் காகவே அரசியல். நம் ஜனங்களைக் கேட்டாலே இந்த உண்மை புரியும். எந்தக் கட்சி எந்தக் கொள்கையைச் சொல்லுகிறது என்று பார்த்து ஓட்டுப்போடுவது கிடையாது. மாறாக, எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப்போட்டேன், கலைஞருக்குப் போட்டேன் போன்ற குரல் களைத்தான் கேட்க முடியும். ஆதிக்கக் கலாச்சாரத்தின் இன்னொரு அடிப்படை இது. ஒற்றைப் பரிமாணச் சிந்தனை அல்லது மந்தைச் சிந்தனையை உருவாக்கி, தங்கள் பலத்தை வளர்த்துக் கொள்வது.
அரசியல் கட்சிகள் கும்பல்தனமான வாழ்க்கையை ஊக்குவிக்கின்றன. இப்போதெல் ல்£ம் கட்சிகளின் ஊர்வலங்கள் மறியல்கள் பேரணிகள் போன்றவற்றிற்கு ஆள் திரட்டுவதற்கென்றே கண்காணிகள் இருக்கிறார்கள். இவற்றில்வந்து கூச்சல்போட்டு விட்டு, லாரிகளில ஊர்வலம் போவோருக்குக் காசு, பிரியாணி கிடைக்கிறது. அதை யும் மீறி தங்கள் இதய தெய்வத்திற்கு, தலைவனுக்கு, தங்களால் ஆனதைச் செய்து விட்டோம் என்ற ஆத்மதிருப்தியும் கிடைத்துவிடுகிறது. மனிதனுக்கு வேறென்ன வேண்டும்?

——————————–
வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்
வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு
காரத்தில் பேசத் துப்பாக்கிச் சூடு
கல்பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை
நேரத்தில் களிப்பூட்ட அகநானு£று
நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப்பார்த்த
தீரத்தில் தேர்ந்தெடுத்த நகைத்துணுக்கு
தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்?
-பரிசில் வாழ்க்கை, ஞானக்கூத்தன் கவிதைகள்
———————————–
நிறுவனமயமாக்கப்பட்ட சமயங்கள், கல்வி, சாதி இவை ஆதிக்கக் கலாச்சாரத்திற்கு உறுதுணையாகவே இருந்து வருகின்றன. ஏற்கெனவே வெளிவந்துள்ள அன்னம் ஏடுகள் இவை பற்றி விரிவாகப் பேசியுள்ளன. எனவே சுருக்கமாக நிறுவனமயமாகி யுள்ள சமயங்கள், கல்வி, சாதி இவற்றிலுள்ள ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகளைக் காண்போம்.

சமயம்
இந்திய சமய நம்பிக்கை உடையவர்களை முழு அளவில் பெற்ற நாடு. சமய நம்பிக்கை அற்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சமயம் சமூக அமைப்பின் மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. கர்மவினை, விதி, மறுபிறப்பு, மோட்சம், இறைவன் செயல் என்றெல்லாம் கூறி அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதனை அதேநிலையில் வைத்திருக்க சமயம் உதவுகிறது. விடுதலைக் கூறுகள் சிலவற்றைக் கொண்டிருந்தாலும் இன்று மதம் கொள்கைகள், கோட்பாடுகள் அடிப்படையில் மக்களால் ஏற்கப்பட்ட ஒன்றல்ல. வெறும் உணர்ச்சிபூர்வ நிலையிலேயே மக்களால் மதம் கைக்கொள்ளப்படுகிறது.
ஐயப்பன், ஆதிபராசக்தி, வேளாங்கண்ணி, பரிசுத்த ஆவி போன்ற குழுவழிபாட்டு இயக்கங்கள் பெருகிவருகின்றன. ஒன்றாகச் சேர்ந்து வழிபடுதல், ஒரே கோஷம், ஒரே மாதிரி உடைகள் போன்ற கூட்டுச்செயல்பாடுகள் காணப்பட்டாலும், உணர்ச்சி வயப் பட்ட இயக்கங்களாகவே இவை உள்ளன. குழுவழிபாடு என்ற முறையில் மக்களை நெருங்கிவரச் செய்கின்றன. ஆனால் சிந்தனையைப் புறயதார்த்தங்களிலிருந்து திசை திருப்பி, தற்காலிகமான நிறைவுக்கு அல்லது போலிநிறைவுக்கு வழிசெய்வனவே இத்த கைய இயக்கங்கள். சிந்தனையைத் து£ண்டுபவையாகவோ, அதன்மூலம் மாற்றத்திற் கான செயல்பாட்டிற்கு ஊக்குவிப்பவையாகவோ இவை இல்லை. தப்பிப்பை ஊக்கு விப்பனவாக உள்ளன. தங்கள் சொந்தப் பிரச்சினையை மறக்கவும் அல்லது அவை ஏதோ ஒரு அற்புத நிகழ்ச்சியால் நிறைவேறிவிடும் என்று எதிர்பார்க்கவும் து£ண்டப் படுகின்றன. குழுச்செயல்பாடு என்னும் மாற்றுக் கலாச்சாரக் கூறு மத அமைப்புக ளால் ஆதிக்கக் கலாச்சாரத்திற்கு உறுதுணையாக்கப்பட்டுள்ளது.

கல்வி
இன்றைய கலாச்சாரப் பரப்பலின் அடித்தளமாக இருப்பது கல்வி. கல்வி என்ற பெயரால் முதலாளித்துவ மதிப்புகள் மட்டுமே நாட்டில் பரப்பப் படுகின்றன. சிந்த னையைச் சற்றும் வளர்க்காத மனப்பாடக் கல்விமுறை, தனிநபர் வழிபாட்டை உருவாக்குகின்ற கல்விமுறை. அண்மைக்காலத்தில் ஆங்கிலவழிக் கல்விமீது மக்களுக்கு ஆசை பொங்கிப் பெருகுவதைப் பார்க்கிறோம். பெருந்தொகைகளை சன்மானமாகக் கொடுத்து, ஆங்கிலவழிப் பள்ளிகளில் எல்கேஜியில் பிள்ளைகளைச் சேர்க்க அலையும் பெற்றோர்கள்தான் எங்கும் நிறைந்துள்ளனர்.
ஆங்கில வழிக்கல்வி சிந்தனையற்ற மூளைகளை உருவாக்குகிறது. ஆடம்பரமோகம், ஒரு தனிஉயர்வகுப்பினராக மாறும் அபாயம் நிறைந்த, பயனற்ற கல்விமுறை இது. கழுத்தில் இறுக்கமான டை, காலில் இறுக்கமான சாக்ஸ், ஷ¨க்கள், முதுகில் மூட்டை புத்தகங்கள், வீட்டில் வந்தாலும் மம்மி டாடி என்று அந்நிய பாஷையில் அழைக்கின்ற தன்மை-இவ்வாறு உருவாகும் இந்தக் குழுவினருக்குக் கிரிக்கெட் ஆடத் தெரியும், நுனிப்புல் விவரங்களை மனப்பாடம் செய்து குவிஸ் போட்டிகளில் பங்கேற்கத் தெரியும், மிக நவீன உடை உடுத்திக் கொள்ளத் தெரியும், இந்தியாவில் இருந்தாலும் பிற பொதுமக்களோடு தொடர்பின்றி இங்கிலாந்தில் பிறந்தவர்கள் போல உளறிக் கொள்ளத் தெரியும், பெரிய நிறுவனங்களில் காசு பண்ணும் கலாச்சாரம் இது. ஆனால் கண்ணெதிரில் நம் விவசாயிகள் எப்படி வாழ்கிறார்கள், உழைப்பாளி மக்கள் எவ்வித அவஸ்தைகளுக்கு ஆளாகித் தங்கள் வாழ்க்கைகளை இம்மாதிரிப் பெரிய மக்களுக்காக விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள் என்பன எல்லாம் தெரியாது. நாட்டிலுள்ள பிரச்சினைகளைப் பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. இவர்களு டைய பார்வை எல்லாம் அமெரிக்கா ஆஸ்திரேலியா மீதுதான். ஆனால் மற்றவர் வரிப்பணத்தில் சொகுசான கல்வி மட்டும் இங்கே வேண்டும். மற்ற மனிதர்கள் மத்தி யில் தன்னை மட்டும் உயர்ந்தவனாக பாவித்துக்கொள்ளும் தற்பெருமையையும், மமதையையும் அளிக்கும் கல்விமுறை இது. இவ்வாறு தன்மகனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கனவுகண்டுதான் குழந்தைகளின் பெற்றோர்களும் இப்படிப்பட்ட கல்விநிறுவனங்களில் சேர்க்கிறார்கள். பாவம், இம்மாதிரிக் கல்வி அளிப்பதில் கிறித்துவ நிறுவனங்களே முன்நிற்கின்றன.

சாதி
நம் கலாச்சாரம் பொருளாதாரத்துடன் பிணைந்துள்ளது. இந்தியச் சூழலில் என்றைக் குமே சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத உறவு இருந்துவருவ தைக் காணஇயலும். இங்கு உயர்சாதிக்காரர்களே உடைமை வர்க்கத்தினராகவும் பெரு முதலாளிகளாகவும் இருப்பதைக் காணமுடியும். தாழ்ந்த சாதிக்காரர்கள் உழைப்பாளி களாகவே இருக்கிறார்கள். சங்க காலத்திலேயே உடல் உழைப்பில் ஈடுபட்ட மக்களைக் கடையர் (சமூகத்தில் கடைசி நிலையில் உள்ளவர்கள்) என்று சொல்லியிருப்பதைக் காண்கிறோம். இடைக்காலத்தில் பிராமணர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் இருபதாயிரம் காசுகள் தண்டம் என்று குலோத்துங்க சோழன் அபராதமே விதித்திருப் பதைக் காண்கிறோம். பெயரளவில் இன்று மக்கள் ஆட்சி என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் சட்டம் மற்றும் நிர்வாக எந்திரங்கள் யாவும் உயர்சாதியினருக்கே உதவு கின்றன. இதற்குக் கீழ்வெண்மணிச் சம்பவம் ஒன்றே போதிய சான்றாகும். 44 தலித் மக்களைக் கொளுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலவுடைமைச் சாதியினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சாதிக்கும் இன்றைய அரசியலுக்கும் உள்ள பிணைப்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவ்வப்போது சாதிக்கலவரங்கள் ஏற்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள் மடிவதையும் காணமுடிகிறது. இதற்கும் அரசியல் து£ண்டலே முதன்மையான காரணமாக நிற்கிறது.

ஒழுக்கம்
சமயமும் கல்வியும் ஒழுக்கத்தை போதிக்கின்றன. ஆனால் ஒழுக்கமின்மையே பரவலா கக் காணப்படுகிறது. உண்மையில் ஆதிக்கக் கலாச்சாரத்தின் கூறுகளைக் கொண்ட சமயமும் கல்வியும் ஒழுக்கக் கேட்டையே ஏற்படுத்திவருகின்றன.

ஒரு தலைமுறைக்கு முன்பிருந்ததுபோன்ற வாழ்க்கை இன்று இல்லை. முற்றிலும் மாறி விட்டது. விடியற்காலையில் எழுந்து து£ய பழக்கங்களுடனே தங்கள் தங்கள் வேலை களில் அன்று யாவரும் ஈடுபட முடிந்தது. இன்று காலை திரைப்படப் பாடல்கள் துயி லெழுப்ப, பெட் காபி வரும்வரை படுக்கையில் கிடந்து பிறகு அவசரஅவசரமாகக் கடமைகளை முடித்துவிட்டு யாவரும் எது எதையோ நோக்கி ஓடுகிறார்கள். கீழ்த்தட்டு மக்களோ நாள்முழுவதும் உழைத்துச் சம்பாதித்ததைக் கள்ளச் சாராயக் கடைகளில் செலவிட்டு மயங்கிக் கிடக்கிறார்கள். மத்திய தர மக்களுக்கு உடலுழைப்பு முற்றிலும் அருகிப்போயிற்று. நல்ல உணவு, நல்ல குடிநீர், ஏன் நல்ல காற்றுகூடக் கிடைக்காமல் இருக்கும்போது நோய்கள் பெருகுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒழுக்கத்தைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?

உழைக்காமலே வளமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் பெருகிவிட்டதால், லஞ்சம் ஊழல் போன்ற சமூக நோய்களும் பெருகிவிட்டன. ஒரு தலைமுறைக்கு முன்னர்கூட, லஞ்சம் வாங்குதல் மிகக் கீழான ஒழுக்கமாகக் கருதப்பட்டது. லஞ்சம் வாங்குபவன் கூனிக்குறுகி மேசைக்குக் கீழ் வாங்கினான். இப்போது லஞ்சமும் ஊழலும் வாழ்க்கை முறைகளாகவே மாறிவிட்டன. இதைப் பெருமையாகக் கருதத் தொடங்கிவிட்டார்கள்.
இதனோடு தொடர்புடையது சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள பேதம். மேடையில் ஏறினால் சங்கப் பண்பாடு, தமிழரின் உயரிய ஒழுக்கம் என்றெல்லாம் உளறுவதைக் கேட்க முடிகிறது. வாழ்க்கை முழுவதிலுமோ சொல்லமுடியாத ஒழுக்கக் கேடுகள். தர்ம சங்கடங்கள். பேச்சில் சங்ககாலத் தன்மானம், சுயமரியாதை. கணைக்காலிரும் பொறை தண்ணீரும் குடிக்காமல் உயிர்விட்டதைப் பாராட்டுவார்கள். ஆனால் உண் மையில், பணத்துக்காக எவன் முனனாலும் கைகட்டிப் பல்லிளிக்கும் கேவலம். சாக்கடையில் விழுந்து புரளும் பன்றிகள் போன்ற வாழ்க்கை. கேட்டால் இதுதான் பிழைக்கும் வழி என்பார்கள். பத்திரிகைகள் முதல் பட்டிமன்றங்கள் வரை தமிழ்க் கற்பு பேசப்படுகிறது. ஆனால் விபசாரம் இல்லாத இடமில்லை. ரெட்லைட் ஏரியா இல்லாத நகரமில்லை.

ஆதிக்கக் கலாச்சாரம்
மேற்கண்ட கலாச்சாரச் சீரழிவுகள் அனைத்திற்கும் பின்னாலிருப்பது ஆதிக்கக் கலாச்சாரம். ஆதிக்கக் கலாச்சாரம் என்பது செல்வத்தையும் அந்தஸ்தையும் அபகரித்துக்கொண்ட ஒரு சிறுபான்மைக் குழுவினர், பெரும்பான்மை மக்களுக்கு எதிராகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள உருவாக்கிய ஒன்று. பெரும்பான்மையினர் தாங்கள் செய்யும் ஏமாற்றுகளை நியாயப்படுத்திக்கொள்ள உருவாக்கிய ஒன்றுதான் ஆதிக்கக் கலாச்சாரம். இதற்குத் துணையாக மதக்கொள்கைகள், புராணங்கள் தொடங்கி எதையும் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள்.
விதி போன்ற கொள்கைகள் என்றென்றைக்கும் ஆண்டான் ஆண்டானாவும் அடிமை அடிமையாகவும் இருப்பதற்காகவே-இருக்கும் அமைப்பை அப்படியே கேள்விகேட்கா மல் நிலைநிறுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. நீ ஏழையாக இருக்கிறாயா, அது உன் விதி. கீழ்ச்சாதியில் பிறந்து அவமானப்படுகிறாயா, அது உன் தலைவிதி. நடுத்தர வர்க்கத்தில் பிறந்து நாளெல்லாம் உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறாயா, அது உன் விதி. இப்படிப்பட்ட சிந்தனைகளுக்கு ஆட்பட்டவர்களை எந்தவித எதிர்ப்புக்கும், எந்தப் புரட்சிக்கும் து£ண்ட முடியாது. முதலாளி சரிவரக் கூலி கொடுக்கவில்லையா, அதற்கு எதிராகப் போராட முடியாது. ஏமாற்றுவது அவன் விதி, ஏமாறுவது நம் விதி.

விதியை நம்பாதோரும் தங்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களிலேயே அமிழ்ந்து கிடந்து எந்தச் சமூக அக்கறையுமற்று சிந்தனையற்று வாழவேண்டும் என்றே ஆதிக்கக் கலாச்சாரம் திட்டமிட்டுச் செயல்படுகிறது. எட்டு மணி நேர உழைப்பு போதாது, பத்து மணி நேரம், பன்னிரண்டு மணி நேரம் உழைக்க வேண்டும் என்று வற்புறுத்துவது, உற்பத்தியைப் பெருக்குவதற்காக மட்டுமல்ல. நாடு முன்னேறவேண்டும் என்பதற்காக அல்லவே அல்ல. ஓய்வு கிடைத்தால்தானே அறிவைப் பெருக்கிக் கொள்ளவோ, சிந்திக்கவோ முடியும்? அதுவே இல்லாமல் செய்து விட்டால்? யாருக்கும் எந்தச் சமூக அமைப்பையும் கட்ட முடியாது, சிந்திக்க நேரம் இருக்காது, எந்தச் சமூக இயக்கத் திலும் பங்குகொள்ள முடியாது. வீட்டுக்கு வந்தோமா, படுத்துத் து£ங்கினோமா, காலையில் மறுபடி வேலைக்கு அவசரஅவசரமாக ஒருவாய் அள்ளிப்போட்டுக் கொண்டு கிளம்பினோமா, மறுபடி திரும்பினோமா….ஓய்வற்ற எந்திர வாழ்க்கை. சிலபேர் தாங்கள் சொகுசாக இருப்பதற்காக பலப்பல கோடிப்பேரை எந்திரங்களாக்கி அவர்கள் வாழ்க்கையை அர்த்தமற்றதாகச் செய்கிறது ஆதிக்கக் கலாச்சாரம்.

ஆகவே கலாச்சாரம் என்பது, நம் வாழ்க்கை என்பது அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்தது. கலாச்சாரம் பற்றிய எந்தப் பார்வையும் அரசியல், பொருளாதாரச் சார்பின்றி நிகழ்த்தப்பட முடியாது. பொருளாதாரம்-அரசியல்-சமூகம்-சமயம் ஆகிய அனைத்தும் பின்னிப்பிணைந்திருக்கின்றன.
மூலகாரணங்கள்

பணம் ஒன்றே இன்று எதற்கும் அடிப்படை அளவுகோலாக ஆட்சிசெலுத்துகிறது. இப்படிப்பட்ட மதிப்பீட்டை உருவாக்கியது ஆதிக்கக் கலாச்சாரம். இன்று ஆதிக்கக் கலாச்சாரத்திற்குப் பின்னால் இருப்போர் பெரிய வணிக சக்திகள். பெருமுதலாளி கள். பழங்கால அரசர்களைப் போல. ஆதிக்க சக்திகள் எப்போதும் தனித்திருப்பது கிடையாது. அரசியல் செய்பவர்களுக்குத் தங்களை நியாயப்படுத்த மதம் சார்ந்த, ஒரு கற்றறிந்த குழுவினர் வேண்டும், மதக்குழுவினர்க்குத் தாங்கள் சுகமாக வாழ அரசிய லின் துணை வேண்டும். கி.மு.விலேயே சந்திரகுப்தனும் சாணக்கியனும் சேர்ந்தது ஆதிக்கக் கலாச்சாரத்தின் அடிப்படையைத் தெளிவாக உணர்த்தக்கூடியது. ஆதிக்கம்-குயுக்தியான அறிவு இவற்றின் சேர்க்கை.

ஆதிக்கக் கலாச்சாரம் எப்போதும் தனித்திருப்பது கிடையாது. அவர்கள் மற்றவர்க ளைத்தான் இனம், மொழி, சாதி, வர்ணம், நாடு, மதம் போன்ற எந்த அடிப்படையிலா வது பிரித்துவைப்பார்கள். அப்போதுதான் அவர்கள் கேள்வியின்றி வாழமுடியும். தங்களைப் பிறர் எதிர்க்காதவாறு சுயநலசக்திகள் எப்போதும் ஒன்றுசேர்ந்து கொள்ளும். இங்குள்ள பஜாஜ் அல்லது டாட்டா ஒரு அமெரிக்க முதலாளியோடு, அல்லது ஜப்பானிய முதலாளியோடு எளிதாகக் கூட்டுவைத்துக் கொள்ளமுடியும், அர சியலையே ஆட்டிப்படைக்கவும் முடியும்.
இன்றிருக்கும் அரசாங்கமும் இவர்கள் சார்பாகவே இருக்கிறது. காங்கிரஸ் அரசாயினும், ஜனதா தள அரசாயினும், அல்லது உள்ளூர்க் கட்சிகளுடைய அரசாயி னும் எதுவும் அந்நிய மூலதனச் சார்புடைய அரசாகவே உள்ளது.

பிறநாட்டு முதலாளிகள் நம் நாட்டில் வந்து தொழில் தொடங்குவதற்கு என்ன அக்கறை? வளர்ந்த நாடுகளிலுள்ள பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள்தான் நம் நாட்டில் தொழில்களைத் தொடங்குகின்றன. இவற்றிற்குத் தேவையான மூலப் பொருள்கள் இங்கே மலிவாகக் கிடைக்கின்றன. மிக மலிவான உழைப்பாளிகள் கிடைக்கிறார்கள். நம் நாட்டையே அவர்களுக்குச் சோதனைக் கூடங்களாகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
————————————
பூமியின் வறட்சியான பகுதிகளில் இருந்தும் வருகின்ற தண்ணீர், ஏற்கெனவே நீர் நிறைந்துள்ள கடலைநோக்கித்தான் ஓடுகிறது. அதேபோலத்தான், ஏழை மக்களிடமும் உள்ள செல்வமும், ஏற்கெனவே பணம் நிறையப் பெற்றுள்ள நாடுகளிடமும், பணக் காரர்களிடமும் செல்லுகிறது. -ஜூலியஸ் நைரேரே.
————————————–
பன்னாட்டு முதலாளித்துவத்தின் அடிப்படையான நவீன தொழில் நுட்பம், மனித உயிருக்கு எவ்வளவு அபாயம் விளைவித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு நம் நாட்டில் யூனியன் கார்பைடு போபாலில் விளைவித்த நாசமே நல்ல சான்றாகும். இது அமெரிக்க முதலாளி ஒருவனின் தொழிற்சாலை. இதில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு (1984) அபாயததினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர், பலநு£ற்றுக்கணக்கான பேர் குருடாயினர் என்பது ஒருபுறம் இருக்க, இன்னும் இதன் பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. நமது அரசாங்கத்தினால் இந்த முதலாளியை ஒன்றும் செய்ய முடியவில்லை. குற்றக்கூண்டிலும் நிறுத்த முடியவில்லை. இழப்பீடும் வாங்க முடிய வில்லை. ஆனால் இன்றுவரை யூனியன் கார்பைடின் எவரெடி செல்கள்தான் எங்கும் விற்பனையாகின்றன. அரசாங்கத்தினாலும் அசைக்கமுடியாதது அந்நிய முதலாளித் துவம்.
—————-
இந்தியாவில் மனித உறுப்புகள் மாமிசத்தைப் போல விலைபேசப்படுகின்றன. உயிருள் ளவர்களின் சிறுநீரகம் ரூ. 30,000. உயிருள்ளவர்களின் கண், ரூ. 80,000. இறந்தவரின் உடல் ரூ. 6,000. சிறுநீரக வியாபாரம் இன்று வருடத்திற்கு ரூ. 40 கோடிக்கு நடக்கிறது. ஒரு ஏழையின் ஆரோக்கியத்தைப் பறித்து ஒரு பணக்காரனுக்குக் கொடுக்கும் சூறையா டல் இது. -டாக்டர் கொலாபாலா, இந்தியா டுடே, 31-07-90
——————–

இந்த நிலையில் இந்தியாவில கூடங்குளங்கள் பெருகிவருகின்றன. முதுலாளித்துவம் மலிவாக, இன்னும் மலிவாக இன்பங்கள் வேண்டும் என்ற எண்ணத்தில் மூல வளங்க ளைச் சுரண்டுகிறது. இந்த வளங்கள் அனைத்தும் வளர்ந்த நாடுகளில் வாழும் ஒரு சிலருக்கே கிடைக்கின்றன. அதேசமயம், உலகில வறுமை பெருகிவருகிறது.
———————
தெற்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கொடிய வறுமை நிலவுகிறது. இலத்தீன் அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தவரிடையேயும் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களிடையேயும் வறுமை மிகுதியாகக் காணப்படுகிறது.
-1990ஆம் ஆண்டுக்கான உலக மேம்பாட்டு அறிக்கை, உலகவங்கி வெளியீடு, இந்து நாளிதழ், 16-07-90
—————————–
முதலாளித்துவம் மூல வளங்களைச் சுரண்டித்தான் பிழைக்க முடியும் என்பதால் சுற்றுச்சூழல் பற்றிய கவலையின்றி அவை சுரண்டுகின்றன. உலகின் வளப்பகுதிகள் யாவும் மேற்கு நாடுகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மழை குறைதல், தேவையற்ற வெள்ளப்பெருக்கு, நிலத்தடி நீர் கிடைக்காமை, உலக முழுவதும் பாலைவனப் பகுதிகள் விரிவடைந்து வருகின்றன. இந்தியருக்கோ, பருவ மழையும் கிடைக்காமல், நிலத்தடி நீரும் வறண்டுபோய் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் திண்டாட்டம்.
சரியான பொருளாதாரக் கொள்கை இன்மையால், மூன்றாம் உலக நாடுகளில் நகர்ப்புறம் நோக்கி ஏழைகள் கிராமங்களிலிருந்து இடம் பெயர்தல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. நகரப்புறங்களும் நகரைச் சார்ந்த சேரிகளும் விரைந்து வளர் கின்றன. உலகிலேயே மிகப் பெரிய சேரிப்பகுதி பம்பாய் நகரத்தில் இருக்கும் தாராவிப் பகுதி என்று சொல்லப்படுகிறது. நகர்மயமாதல், பொருளாதார ஏற்றத் தாழ்வை இன்னும் அதிகமாக்குகிறது. நகரங்களின் மேம்பாட்டிற்கெனப் பொருளாதா ரத்தின் கணிசமான பகுதி செலவழிக்கப்படுகிறது. கிராமப்புறங்களுக்கும் விவசாயத்துக்கும் போகவேண்டிய பணம் நகரங்களுக்குப் போய்விடுகிறது. நகரங்கள், இன்று மனிதத்தன்மையற்ற வெறும் கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன. அவை சுற்றுச்சூழலையும் நாசமாக்குகின்றன. ஏராளமான குற்றங்கள், ஒழுக்கக் கேடுகள் ஆகியவை நகரங்களினாலேயே வளர்கின்றன. (தொடரும்)


ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)

ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2
(இந்தக் கட்டுரையின் முதல் பகுதி சில நாட்களுக்குமுன் வெளியிடப்பட்டது. இது இரண்டாவது பகுதி.)

விளம்பரங்கள்

“சிவப்பழகு பெறப் பயன்படுத்துங்கள் ஃபேர் அண்ட் லவ்லி கிரீம்” என ஒரு கம்பெனி விளம்பரப்படுத்துகிறது. “பொன்னிறமான அழகுக்கு ரெக்ஸோனா” என்று அந்த சோப் விளம்பரம் சொல்லுகிறது. இவை விளைவிக்கும் மனப்பாங்கு, இவற்றின் அடிப்படையிலுள்ள கருத்துருவம் என்ன? ஏன் சிவப்பழகு? ஏன் பொன்னிறமான உடல்? கருப்பு அழகில்லையா? இந்தியா போன்ற வெப்பமான ஒரு நாட்டில், உடலுழைப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான மக்கள் எப்படி சிவப்பாக, பொன்னிறமாக இருக்க முடியும்? சிவப்பழகு என்பது ஒரு உடலுழைப்பற்ற மேல்தட்டு வர்க்கத்தின், பார்ப்பனீயத்தின் கருத்தாக்கம். இதன் அடிப்படையிலும் சாதியமைப்பே உள்ளது. அது தொலைக் காட்சி வாயிலாக, பத்திரிகைகள் வாயிலாக, வானொலி வாயிலாக எல்லார்மீதும் திணிக்கப்படுகிறது.
**********************************************************************
நான்கு சாதிகளுக்கும் நான்கு வர்ணங்கள் கற்பிக்கப்பட்டன. பிராமணர்களுக்கு வெள்ளை, சத்திரியர்களுக்கு மாநிறம், வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் கருப்பு. ஆரியர்கள் தூய வெள்ளையாக இல்லாவிட்டாலும, நல்ல நிறம் கொண்டவர்களே. தாசர்களும் தஸ்யூக்களும் கருப்பு நிறத்தவர்கள்.
-ரோமிலா தாப்பர், பாரம்பரியம் முதல் அரசு வரை, ப.44
——————————————-

ஏங்க, உங்களைத் துவைச்சுப்போடுங்க, சமைச்சுப்போடுங்கன்னா சொல்றேன். போய் இதயம் நல்லெண்ணெய் வாங்கிட்டு வாங்கன்னுதானே சொல்றேன்….
அப்படி என்னம்மா விசேஷம் இதயம் நல்லெண்ணெயிலே?
அதில காரல் இல்ல, கசப்பில்ல, கொலஸ்டிரால் இல்ல. அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம், ம், போய் வாங்கிட்டு வாங்க….
-இதயம் நல்லெண்ணெய், டிவி-வானொலி விளம்பரம்
************************************************************************************

இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தைச் சற்றே கவனிப்போம். அது என்ன சொல்கிறது? “ஏங்க உங்களைத் துவைச்சுப்போடுங்க, சமைச்சுப்போடுங்கன்னா சொன்னேன்?” இந்தக் கேள்வியின் தொனி என்ன? ‘உங்களை என்ன பெண்கள் வேலை அல்லது அசிங்கமான வேலைகளையா செய்யச் சொல்கிறேன்?’ இதை ஒரு பெண் தன் கணவனிடம் சொல்வதாகக் காட்டுகிறது விளம்பரம். அப்படியானால், ஓர் ஆடவன் சமைத்தல், துணி துவைத்தல் முதலியவற்றைச் செய்வது ஏற்கப்படாத விஷயம். இப்படிக் கூறுவது ஆதிக்கக் கலாச்சாரம். மேலும் இந்தத் தொனி விளம்பரத்தின் கடைசிவரை (பொம்பளைங்க சமாச்சாரம்) வரை தொடர்கிறது.
வீட்டிற்கு வெளியே துணி துவைக்கும் ஆண் (வண்ணான்), தெருவைச் சுத்தம் செய்யும் ஆண் (தோட்டி) தாழ்த்தப்பட்டவனாகக் கருதப்படுகிறான். இதே துணி துவைத்தல், சுத்தம் செய்தல் போன்றவற்றை வீட்டிற்குள் செய்யும் பெண்ணும் தாழ்த்தப்பட்டவளாக நடத்தப்படுகிறாள். துணிதுவைப்பது, சுத்தம் செய்வது போன்றவை, சாதி அல்லது பால் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள் செய்யும் வேலைகளாக்கப் பட்டுள்ளன.

வளர்ந்த நாடுகளில் இந்த வேலைகளை ஆண்கள் செய்வது சகஜம். இரண்டாம் உலகப் போர், ரஷ்யாவில் பெண்மணிகள் போர்வீராங்கனைகளாக மாறியதைக் கண்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையாக விதித்துள்ள உயிரியல் சார்ந்த பொறுப்புகள் அன்றி வரையறுத்த பணிகளை விதித்தது யார்? இந்த விளம்பரம் பெண்ணின் வரையறுக்கப்பட்ட பணிகள் வீட்டில்தான் என்கிறது. இவ்வளவு படித்தவளாகக் காட்டப்படும் இந்தப் பெண்மணி (நல்லெண்ணெயில் கொலஸ்டிரால் இல்லை என்பதை அறிந்தவள்) தானே போய் அதை வாங்கிவரத் தெரியாதவளா? கணவனிடம்தான் வாங்கிவரச் சொல்லவேண்டும். அதுதான் பெண்ணுக்கு அழகு. பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள இடம். மேலும் இதயம் நல்லெண்ணெயில் என்ன குணங்கள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்வதுகூட “பொம்பளைங்க சமாச்சாரம்”. (இதை ஒரு பெண்ணே கூறுகிறாள்). சமைத்துப் போட்டதை நாக்கை நீட்டிக்கொண்டு குற்றம் குறை சொல்லிவிட்டுச் சாப்பிட்டுப் போவதுதான் “ஆம்பளைங்க சமாச்சாரம்” போலும். (இந்த விளம்பரத்தில் ஒரு தவறான முன்வைப்பும் இருக்கிறது. இதயம் நல்லெண்ணெயில் மட்டும்தான் கொலஸ்டிரால் இல்லை என்பதில்லை, எந்த நல்லெண்ணெயிலுமே அது இல்லை.)

இவ்வளவு கலாச்சார வரையறைகளை-ஒரு நிலவுடைமைச் சமூகம் வரையறுத்த மதிப்புகளை-ஆண்மை வீட்டிற்கு வெளியே) பெண்மை (வீட்டிற்கு உள்ளே) என்பதற்கான கருத்துருவங்களைக் கொண்டிருக்கும் விளம்பரம் இது. எல்லாக் கலாச்சாரச் சாதனங்கள் வாயிலாகவும் தமிழ்நாட்டில் விஷம்போலப் பரப்பப் படுகிறது. இந்த நாட்டின் அரசாங்கம் உண்மையில் சமத்துவத்திலோ பெண்களின் முன்னேற்றத்திலோ நம்பிக்கை கொண்டதாக இருந்தால் இதனை எல்லா வெகுஜன சாதனங்களிலும் அனு மதிக்கலாமா? இதுபோன்றவற்றை அரசாங்கம் அனுமதிப்பதற்குக் காரணம், இவை தரும் பணம். வருமானம். அதாவது அரசாங்கம் ஒரு முதலாளியாகச் செயல்படுகிறது. பொதுமக்கள் நன்மையைவிட பணத்தையே பெரிதாகக் கருதுகிறது. தனக்குப் பணத்தை வாரி இறைக்கக்கூடிய முதலாளிகளின் சார்பில் நிற்கிறது. இவ்வாறு முதலாளிளின் சார்பாக, நிலவுடைமை மதிப்புகளின் சார்பாக, பெண்ணடிமைத் தனம், சாதி முதலியவற்றின் சார்பாக இயங்கும் இந்த அரசாங்கம், பெரும்பான்மை யோராக உள்ள ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மீது நேசமாக நடந்துகொள்ளும் என்று யார்தான் நம்பமுடியும்?

இன்னும் ஒரே ஒரு விளம்பரத்தை மட்டும் பார்த்துவிட்டு மேலே செல்வோம். லியோ டாய்ஸ் விளம்பரம் இது. இதில் ஆண்குழந்தைகளுக்கு வேறு விளம்பரம், பெண் குழந்தைகளுக்கு வேறு.
ஆண்குழந்தைகளின் விளம்பரத்தில்: சுடுகின்ற வீரர்கள், தப்பிக்கும் வாகனங்கள், ஓடுகின்ற கார்கள், இப்படி சுமார் ஒரு நிமிட நேர விளம்பரத்தில் ஆறேழு கட் செய்யப்பட்டு துடிப்புடன் இணைக்கப்பட்ட காட்சிகள்.
பெண் குழந்தைகளுக்கான விளம்பரத்தில்: ஒரு அழகான பெண் பொம்மை, நன்கு அலங்கரிக்கப்பட்டு, ஆடம்பரமாக, கையில் ஒரு குழந்தை பொம்மையுடன், மெதுவாகத் தன் அழகுத் தோற்றத்தைக் காட்டுவதுபோலத் திரும்புகிறது. இதில் ஒரு கட் கூடக் கிடையாது. மென்மை இனிமை மெதுத்தன்மை. இந்த இரு விளம்பரங்களையும் பார்க்கின்ற சிறார் மனத்தில் என்ன விளைவுகளை இவை ஏற்படுத்தும்? ஆண்கள் என்றால் துடிப்பு, ஓட்டம், துப்பாக்கி, சண்டை, அட்வென்ச்சர். பெண்கள் எனறால் மென்மை, அலங்காரம், அழகு, கவர்ச்சி. இந்திய சினிமாவிலும் இதே மதிப்புகள்தான் முன்வைக்கப்படுகின்றன.

இவற்றில் கவனிக்க வேண்டியது இதுதான். எப்படி வெகுஜனக் கலாச்சார சாதனங்கள், விளம்பரங்கள், ஏற்கெனவே சமூகத்தில் ஏற்கப்பட்ட மதிப்புகளை இன்னும் ஆழமாக ஏற்கும் வகையில் மக்களிடம் பரப்புகின்றன என்பது. ஜனநாயகம் என்று சொல்லப்படும் போர்வையில் இவற்றால் வெளிப்படுத்தப்படுவன ஜனநாயக, சமத்துவ மதிப்புகள் அல்ல. முதலாளித்துவத்தின், சாதியத்தின், அதிகாரத்தின், பணபலத்தின் மதிப்புகள்தான் இவை. ஜனநாயகம் என்பது பணபலம், சாதிபலம், அதிகாரபலம் என்பதை மறைமுகமாக மக்களை ஏற்கவைக்கும் முறை இது. இவற்றை உள்வாங்கிக் கொள்ளும் மக்களுக்கு தேர்தல்சமயத்தில் புழங்கும் கருப்புப் பணமோ, தேர்தலில் பணக்காரர்கள் மட்டுமே ஆதிக்கம் பெறுவதோ, ரௌடியிசம் இவற்றால் வலிமை பெறுவதோ எப்படித் தவறாகத் தோற்றமளிக்கும்? இதெல்லாம் இயற்கைதானே என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

ஆதிக்கக் கலாச்சாரத்தின் மோசமான அம்சமே இதுதான். ‘நாம் பார்க்கும் உலகம்தான் இயற்கையானது’ என்ற கருத்துக்கு ஆட்படுவது. வாழ்க்கையில் நாம் காணும் ஏற்ற்த் தாழ்வுகள், வர்க்க வேறுபாடுகள், கொடூரங்கள் யாவும் இயற்கை நியதி, இவற்றை எதிர்த்து நாம் ஒன்றும் செய்ய இயலாது, ஏற்றுக் கொள்வது நம் தலைவிதி என்னும் மனப்பான்மையை ஆதிக்கக் கலாச்சாரம் உருவாக்குகிறது.
1. இதனால் சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு சமூகநீதிக்காகப் போராடும் குணம் அறவே அற்றுப்போகிறது.
2. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அதற்குப் பழமொழி சொல்வார்கள். பணக்காரன்தானே தேர்தலில் நிற்க முடிகிறது என்றால், ‘ஐந்து விரலும் ஒன்றாகவா இருக்கிறது, விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும்’ என்பார்கள். லஞ்சம் வாங்குகிறார்களே எல்லாவற்றுக்கும் இது தவறல்லவா என்றுகேட்டால், ஆமாம், ‘தேனை வழித்தவன் புறங்கையை நக்காமல் விடுவானா’ என்று அதையும் ஏற்றுக்கொண்டு ஒரு பழமொழி சொல்வார்கள்.

தகவலளிக்கும், பயனளிக்கும் விளம்பரங்களால் தீமையில்லை. வணிக விளம்பரங்க ளே அவற்றின் கவர்ச்சியாலும் மனத்தை பாதிக்கும் தன்மையாலும், நம்மால் ஆராயப் படவேண்டியவை. சாதாரணமாக, ஒரு வணிக விளம்பரம், விற்பனைப் பொருளைப் பற்றிய உண்மையைத்தான் கூறவேண்டும். ஆனால் இன்றைய வணிக விளம்பரங் களில் நியாயம் இலலை. முதலாளித்துவக் கருத்தியலே அவற்றில் வெளிப்படுகிறது என்பதோடு அவை விளம்பரம் செய்யும் பொருள்கள் பெரும்பான்மை மக்களுக்குத் தேவையற்றவை.
வெகுஜனச்சாதனங்கள் விளம்பரங்களையே முற்றிலும் சார்ந்துள்ளன. தாங்கள் பிழைத்தாக வேண்டுமெனில், வணிக நிறுவனங்கள் அனைத்தும் முதலாளித்துவ நிறுவனங்களோடு தொடர்பு வைத்துக் காசு அடிக்க வேண்டும், பொதுமக்களை அவற்றின் நுகர்வோராக மாற்றவேண்டும். இதற்குப் பத்திரிகைகளும் விதிவிலக்கில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை விளம்பரங்கள் வெகுஜனச் சாதனங்கள் ஊனமுறாது தாங்குவதற்குரிய அளவிலேயே பயன்படுத்தப்பட்டன. இன்று இந்த நிலை மாறி, விளம்பரங்கள் இல்லாமல் எந்த வெகுஜனச் சாதனமும் இயங்க முடிய்£து என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இவை நாடும் விளம்பர முதலாளிகளை எந்தப் பத்திரிகையும் தொலைக்காட்சியும் பகைத்துக் கொள்ள முடியாது. ஆகவே முதலாளித்துவ நாடுகளின் அரசாங்கங்கள், ஊடகங்கள் என்று அனைத்துமே ஒருசில முதலாளிகளுக்காக இயங்குபவை ஆகிவிட்டன. பொதுவுடைமை நாடுகளில் அரசாங் கத்தின் வாய்க்கருவியாக மட்டுமே ஊடகங்கள் இயங்குகின்றன என்று குறை கூறினார்கள் முன்பு. அரசாங்கத்தின் வாய்க்கருவியாக இயங்குவதே தவறு என்றால் சுயநலம் மிக்க ஒரு சில முதலாளிகளுக்காக இயங்குவது மட்டும் நியாயமா என்ற கேள்வியை அவர்கள் யோசித்துப்பார்க்கட்டும். ஒருசில முதலாளிகளின் கைப்பாவையாக அரசாங்கம் இயங்குவதைத்தான் இவர்கள் சுதந்திரம் என்கிறார்கள்.

——————————————
நம் நாட்டில் எந்த மோசமான திரைப்பட நடிகரும் நடிகையும் எந்த நிமிடத்திலும் ஒரு அரசியல் தலைவராகலாம். ஒரு பத்திரிகையும் நடத்தலாம். ஒன்று அல்லது சில தொலைக்காட்சிச் சேனல்களைத் தங்களுக்கெனத் தொடங்கி நடத்திக்கொள்ளலாம். அரசியல், திரைப்படம், பத்திரிகை உள்ளிட்ட பிற ஊடகங்கள் யாவும் ஒன்றை ஒன்று சார்ந்து, ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கமுடியாமல், ஒரே நோக்கம் கொண்டு, சமூகத் தின் தாழ்வுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோ திகளின் கூட்டுச் செயல்பாடுதான் நம் அரசாங்கம் என்று சொல்லலாம். அதனால் அரசாங்கத்தில் உள்ளவர்கள், பிறர் தங்களை எதிர்க்காமல் இருக்கக் காவல் துறையை மட்டும் தங்கள் வயப்படுத்திக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றனர்.
மனித மேம்பாடும் கலைத்தொடர்புப் பணியும் என்ற கட்டுரை.
———————————–

விளம்பரங்கள், மக்களின் நோக்கங்களையும் வாழ்க்கை மதிப்புகளையும் பெருமளவில் பாதிக்கின்றன. நமது வாழ்க்கையிலேயே விளம்பரப் பாணியிலான பேச்சு பழகிவிட்டது. பெரும்பத்திரிகைகளில் வரும் புனைகதைகள், நவீன விளம்பரத்தின் பாணியையும் தந்திரங்களையும் மிகுஉணர்ச்சியையும் பயன்படுத்துகின்றன. எந்தப் பொருளை அல்லது செயலை விவரிப்பதானாலும், கவர்ச்சியான, மேலோட்டமான, இனிமையான, கிளிப்பிள்ளை வாய்பாட்டுத் தொடர்களைப் பயன்படுத்திச் சொல்வது பழக்கமாகிவிட்டது. இவை திரும்பத்திரும்பப் பயன்படுத்தித் தேய்ந்துபோன சொற்களையும் தொடர்களையும் (அவற்றிற்கடியில் அதே அளவு தேய்ந்துபோன சிந்தனைகளையும்) கொண்டவை. அதனால் மக்களின் சிந்தனையை மழுங்கடித்துப் புதிய விதங்களில் சிந்திக்கவிடாமல் செய்துவிடுகின்றன.

இம்மாதிரி நடை அரசியலிலும் பயன்படுத்தப்படுகிறது. மேடைப்பேச்சு என்று கவர்ச்சியான ஒன்றாக மாறியதோ அன்றே சிந்தனைக்கு மோசம் வந்துவிட்டது. அரசியல் பேச்சுகளிலும் தாய்க்குலம், ரத்தத்தின் ரத்தம், உடன்பிறப்புகள், அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகம், நீ கோடு போட்டால் நான் ரோடு போடுவேன் போன்ற வண்டவாளத் தொடர்களைக் காணலாம். திரைப்படப் பாடல்களிலும் இத்தகைய தேய்ந்துபோன விஷ(ய)ங்களே பயன்படுத்தப்படுகின்றன.

காதல், நட்பு, சகோதரத்துவம், தாய்மை, இன்பம், மகிழ்ச்சி, இனக்கவர்ச்சி போன்றவை பற்றிய சில விஷயங்களையே திரும்பத்திரும்பக் கூறி விளம்பரம் இவற்றைப் பொருள் களின்மீது திணிக்கிறது. குறிப்பிட்ட ஒரு ஆடையை அணிந்தால் கணவன் மனைவி அன்பு பெருகும்; குறிப்பிட்ட கடையில் பொன்னகை வாங்கினால் அவர்கள் நெருக்கம் மிகுதியாகும்; (இதற்கு ஏற்கெனவே வாழ்க்கையையும் பொன்னையும் சம்பந்தப் படுத்திச் சொல்லப்படும் கருத்துகள் அரணாக உள்ளன); குறிப்பிட்ட ஷேவிங் கிரீமை அல்லது செட்டைப் பயன்படுத்தினால்தான் மனைவியின் காதல் பெருகும்; குறிப்பிட்டதொரு பற்பசையைப் பயன்படுத்தினால்தான் காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும்; இதுபோல் எல்லாம் விளம்பரங்கள் மனித உறவுகளைச் சிறுமைப் படுத்துகின்றன. குறிப்பிட்ட ஒரு வங்கியில் பணம் வைப்பதற்காக ஒரு மனைவி கணவனை நேசிக்கிறாள் என்பதோ, ஒரு குறிப்பிட்ட கடையில் வாங்கிய சேலையை அணிந்ததற்காகக் கணவன் மனைவியை விரும்புகிறான் என்பதோ எவ்வளவு கேவலமானவை? இம்மாதிரி விளம்பரங்கள் காதல் கொஞ்சல்களுடன், ஆண்பெண் நெருக்கக் காட்சிகளுடன், அந்தரங்கமான பேச்சுகளுடன், பெண்ணின் உடலைக் காட்சிப் பொருளாக்கி, மக்களின் ஆழ்மனத்தைச் சென்று அடைகின்றன. குழந்தைகளின் நாப்கின் (தேவையா?), சோப்பு போன்றவற்றை விற்பதற்கும் பெண் ணின் கவர்ச்சி தேவைப்படுகிறது.

இம்மாதிரி ஆடம்பரப் பொருள்களும், அவற்றை ஒட்டிய செயற்கையான கொஞ்சல்க ளும், சேட்டைகளும் முனகல்களும் இருந்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது என்பது போலவும், இல்லாவிட்டால் வாழ்க்கை சாரமற்றது என்பதுபோல வும் ஒரு கருத்து பார்ப்பவர் மனத்தில் தோற்றுவிக்கப்படுகிறது. நமது வாழ்க்கையைத் தலைகீழாக்கி, வாழ்க்கைக்காகப் பொருள்கள் என்பது போய், வணிகப் பொருள்களுக் காகவே வாழ்க்கை என்பதுபோன்ற ஒரு பிரமையை இவை உண்டாக்குகின்றன.

பெண்கள் வெகுஜனச் சாதனங்களால் முற்றிலும் தவறான பயன்பாட்டுக்கு உட்பட் டுள்ளனர். விளம்பரங்களில் வரும் பெண்கள் கவர்ச்சியுடனும் அழகுடனுமே இருப்பர். அநேக விளம்பரங்கள் திரைப்பட நடிகர் நடிகையரை இதற்காகவே பயன்படுததுகின் றன. இவ்வாறு காட்டப்படுவதன் அர்த்தம், பெண்கள் உடல் அழகினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறார்கள் என்றும், கவர்ச்சி மட்டுமே ஆண்கள் உலகில் பெண்களுக்கு மதிப்பினைப் பெற்றுத் தரும் என்றும் வலியுறுத்துவதற்கே ஆகும். பெண் நுகர்ச்சிப் பொருளாக மட்டுமே படைக்கப்பட்டவள் என்னும் கருத்து இதன்மூலம் நிலைப்படுத்தப் படுகிறது. மீறிச் சென்றால், பெண்கள் குடும்பத்திற்கு உட்பட்ட அளவில் மட்டுமே காட்டப்படுவர், அப்போதும் கவர்ச்சியாகவே. சான்றாக இடுப்புவலிக்குத் தடவும் கிரீமுக்கு விளம்பரத்தில் வரும் மனைவி எவ்வளவு கவர்ச்சியாக நடிக்கிறாள் பாருங்கள்.

பெண்கள் விளம்பரங்களில் விஞ்ஞானிகளாகவோ, ஆசிரியர்களாகவோ, சமூகப் பணியாளர்களாகவோ, நல்ல தாய்மார்களாகவோ கூட வெகுஜனச் சாதனங்களில் காட்டப்படுவதில்லை. அதிக பட்சம் சோப்புக்கும் கிரீமுக்கும் குழந்தை உணவுக்கும் டாக்டர் வேஷம்போட்டுக்கொண்டு கவர்ச்சிப் பெண்கள் வருவார்கள். சமூகத்தில் உண்மையில் பெண்கள் இயங்கக்கூடிய துறைகளைக் காட்டினால் அவர்கள் கவர்ச்சி யை வியாபாரமாக்க முடியாது என்பது காரணம்.

அழகு சாதனப் பொருளாயினும், வீட்டு உபயோகப் பொருளாயினும் (ரீகல் சொட்டு நீலம் முதல் வாஷிங் மெஷின் வரை) பெண்கள் நுகர்வோராக மட்டுமே விளம்பரங் களில் இடம்பெறுவர். இது சமூகத்தில் பெண்கள் நுகர்வோராக மட்டுமே உள்ளனர், (அதாவது செலவு வைப்பவர்களாக மட்டுமே உள்ளனர்), ஆக்குவோராக படைப்பவர் களாக இல்லை என்ற இன்னொரு காலங்காலமான மாயையை நிலைப்படுத்துகிறது. உண்மையில் பார்த்தால், சமூகத்தில் ஆண்கள் உழைப்பைப் போலப் பன்மடங்கு செய் தும், அவர்களைக் காட்டிலும் குறைந்த கூலி பெற்று, அல்லது கூலி பெறாது, சுரண்ட லுக்கு உட்படுத்தப்படுபவர் பெண்களே ஆவர்.
1930ஆம் ஆண்டு வாக்கிலேயே ஆங்கிலஇலக்கியத் திறனாய்வாளர் எஃப். ஆர். லீவிஸ், “விளம்பரங்கள் மலிவான, எந்திரரீதியிலான உணர்ச்சித் தூண்டல்களை உருவாக்கி, மிக எளிய முயற்சியால் கிடைக்கும் உடனடி இன்பங்களை மட்டுமே நாடவைக் கின்றன” என்று சாடினார்.

விளம்பரங்கள் மோசமான உணர்ச்சித்தூண்டல்களையும் தரம் தாழ்ந்த மொழியையும் உருவாக்குகின்றன. மக்களுடைய உணர்ச்சித் தேவைகளைச் சுரண்டிப் பிழைக்கின்றன.
பேராசையையும் போலித்தனமான வாழ்க்கையையும் மேல்நாட்டு வாழ்க்கையைப் பார்த்து காப்பி அடிப்பதையும் உருவாக்குகின்றன.
மென்மையான உணர்வுகளைக் கொன்றுவிடுகின்றன.
விமரிசன பூர்வமாக வாழ்க்கையை நோக்கவிடாமல் செய்கின்றன
என்பது லீவிசின் கருத்து. அவர்கூறிய இக்கருத்துகள், விளம்பரங்களுக்கு மட்டுமின்றி, பொதுவாக வெகுஜனச் சாதனங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
———————-
“விளம்பரங்களின் வடிவம், உள்ளார்ந்த கட்டளைகள், து£ண்டுதல்களை நம்பியிருக்கி றது. இவை நம் சிந்தனையைக் கட்டுப்படுத்தி, ஒரே பாணிக்கு மாற்றிவிடுகின்றன. ளிம்பரங்களில் காணும் பொருள்களைக் கொண்ட போலியான ஒரு உலகில் மனிதனை வாழவைத்து, நிஜவாழ்க்கையை வெறுப்புடன் நோக்கச் செய்கின்றன. ஆடம்பரமான, பணக்காரத்தனமான வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புகளைத் தங்கள் காட்சிப்படிமங்கள் மூலம் உருவாக்குகின்றன. இதனால் போலியை நிஜமாகவும், நிஜத்தைப் போலியாகவும் நம்பவைக்கின்றன.”
-மார்ஷல் மெக்லு£ஹன், தொடர்பு மொழியாக விளம்பரம் என்ற நு£லில்.
———————————–


முரண்பாடு

உலகில் வாழ்வதற்குப் பலவித வழிகள் உள்ளன. ஒருவனேகூட அந்தந்த சமயத்திற்கு ஏற்றாற்போல
வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பழமொழிகள் இந்த முரண்பட்ட தன்மையை நன்கு பிரதிபலிக்கின்றன. உதாரணத்திற்குச் சில ஆங்கிலப் பழமொழிகளைச் சுட்டிக்காட்டலாம்.

‘காத்திருப்பவர்களுக்குத்தான் நல்லவை யாவும் கிடைக்கின்றன’ என்பது ஒரு பழமொழி. All good things come to those who wait. இதேபோல் நிதானத்தை வலியுறுத்தி slow and steady wins the race என்ற பழமொழியும் இருக்கிறது. ஆனால் பாருங்கள், Time and tide wait for none என்றும் ஒரு பழமொழி சொல்கிறது. காத்திருப்பதா, உடனே செயலில் இறங்குவதா?

Wise men think alike என்று ஒரு பழமொழி. Fools seldom differ என்றும் ஒரு பழமொழி சொல்கிறது. ஆகமொத்தம், விவேகிகளோ, முட்டாள்களோ எல்லாரும் ஒரே மாதிரி யாகத்தான் சிந்திக்கிறார்கள் போலும்!

Do it well or not at all என்று ஒரு பழமொழி சொல்கிறது. எதையும் நன்றாகத்தான் செய்ய வேண்டும். இல்லையெனில் வேண்டாம். ஆனால் Half a loaf is better than none என்றும் ஒரு பழமொழி சொல்கிறதே?

சந்தேகம்தான் ஞானத்தின் தொடக்கம் என்பது ஒரு பழமொழி. Doubt is the beginning of wisdom. ஆனால் Faith will move mountains என்றும் ஒரு பழமொழி சொல்கிறது. நாம் எதைத் தேர்ந்தெடுப்பது, சந்தேகத்தையா, விசுவாசத்தையா?

இப்படிப்பட்ட பழமொழிகள் வாழ்க்கையின் முரண்பட்ட தன்மையை நாம் புரிந்து கொள்வதற்கு முதன்மையாகத் துணைசெய்கின்றன.


வேலை

ஒருவன் தனது வேலை பயங்கரமாக முக்கியமானது என்று நம்புவது அவனுக்கு நரம்பு மண்டலம் பிரேக்டவுன் ஆவதற்கான அறிகுறி. -பெர்ட்ரண்ட் ரஸல் (1872-1970)


பணிவு வேண்டாம்!

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்த கோல்டா மேயர் (1898-ஃ978) ஒரு புகழ் பெற்ற பெண்மணி, ஆசிரியராக இருந்து தலைவராக உயர்ந்தவர். அவரைப் பார்க்க ஒருசமயம் ஒரு அமெரிக்க அரசியல் நிபுணர் வந்தார். மிகுந்த போலிப்பணிவு காட்டி நடந்துகொண்டார். அப்போது அவரைப் பார்த்துச் சொன்னார் கோல்டா மேயர்: “இவ்வளவு பணிவு வேண்டாம், இன்னும் அவ்வளவுக்கு நீங்கள் உயரவில்லை.”


காப்பியும் குவளையும்

பழைய மாணவர்களின் கூட்டம் ஒன்று கல்லூரியில் நடந்துகொண்டிருந்தது. அதற்குப் பொறுப்பேற்றிருந்த பேராசிரியர் மாணவர்களுக்குக் காப்பி கொடுக்குமாறு பணியாளர்களுக்குக் கூறினார். அவர் ஏற்பாட்டின்படி, ஒரு பெரிய குழாய்வைத்த டிரம்மில் காப்பி கொண்டுவரப்பட்டது. குவளைகள்தான் வெவ்வேறு மாதிரிகளில் இருந்தன. போர்சிலைன், பிளாஸ்டிக், கண்ணாடி, பளிங்கு, காகிதம் இப்படிப் பலவேறு பொருள்களால் செய்யப்பட்டவை. சில அழகாக இருந்தன, சில அலங்காரம் எதுவுமின்றி.
“நீங்களே காப்பி எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் பேராசிரியர்.
இப்போது எல்லார் கையிலும் குவளைகளில் காப்பி இருந்தது. பேராசிரியர் சொன்னார்:
“பார்த்தீர்களா! அழகாக இருந்த விலை உயர்ந்த கப்புகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டீர்கள். பிளெயினான, மலிவான குவளைகளை விட்டுவிட்டீர்கள். அவரவர்க்குத் தேவையான மிகச் சிறந்தததை எடுத்துக் கொண்டீர்கள், ஆனால் அங்கேதான் ஒரு சிறிய பிரச்சினை.
காப்பி எல்லாருக்கும் ஒன்றுதான், ஒரே தரத்தில், ஒரே சுவையில்தான் இருக்கிறது. குவளைகளால் காப்பியின் தரம் மாறிவிடப் போவதில்லை.
நீங்கள் எல்லாரும் விரும்பியது காப்பிதானே! குவளை இல்லையே! குடித்ததும் அதை வைத்துவிடப்போகிறீர்கள் அல்லது குப்பைக்கூடையில் போடப் போகிறீர்கள். ஆனால் பிரக்ஞைபூர்வமாக எல்லாரும் அழகான, நல்ல, விலைஉயர்ந்த குவளையையே தேர்ந்தெடுத்தீர்கள்.
உங்கள் வாழ்க்கைதான் காப்பி. உங்கள் வேலை, பணம், சமூகத்தில் உங்கள் அந்தஸ்து இவையெல்லாம் குவளைகள். வாழ்க்கையை வைத்திருக்கக்கூடிய பாத்திரங்கள் அவை. அவை நாம் வாழும் வாழ்க்கையை வரையறுக்கவோ, நமது வாழ்க்கையின் தரத்தினை மாற்றவோ போவதில்லை. சில சமயங்களில் குவளையிலேயே கவனத்தைச் செலுத்தி காப்பியின் சுவையை மறந்துபோய்விடுகிறார்கள் சிலர். அதுபோல ஆகிப்போய்விடலாகாது.”


ஒரு அயல்நாட்டுக்கதை

இது ஒரு அயல்நாட்டுக்கதை.
ஒரு பையன் ஒரு கடைக்குச் சென்றான். அங்கு தொலைபேசி வசதி இருந்தது. தொலைபேசியின் சில எண்களைத் தட்டிப் பேச ஆரம்பித்தான். பேசுபவன் சிறு பையன் ஆனதால் கடைக்காரர் அவன் என்ன பேசுகிறான் என்று கவனிக்கலானார்.
பையன்: அம்மா, உங்கள் தோட்டத்தில் புல்லை வெட்டி சீர்ப்படுத்தும் வேலையை எனக்குத் தருகிறீர்களா?
பெண் (அடுத்த முனையிலிருந்து): தம்பி, என்னிடம் அதற்கு ஆள் இருக்கிறது.
பையன்: அம்மா, இப்போது நீங்கள் அந்த ஆளுக்குத் தரும் கூலியைவிடக் குறைத்துக் கொடுங்கள். பாதி கொடுத்தாலும் போதும்.
பெண்: இப்போது வேலை செய்யும் பையனே நன்றாகச் செய்கிறான்.
பையன்: (விடாமுயற்சியோடு) உங்கள் தோட்டத்தின் நடைபாதை, பக்கத்திலுள்ள இடங்கள் எல்லாவற்றையும் நான் சுத்தம் செய்வேன் அம்மா. மற்றவீடுகளைவிட உங்கள் வீடு பார்க்க சுத்தமாக அழகாக இருக்கும்.
பெண்: இல்லைப்பா, வேண்டாம்.
பையன் தொலைபேசி ரிசீவரை வைத்தான். கடைக்காரரிடம் பணம் கொடுப்பதற்காக வந்தான். அவர் சொன்னார்: தம்பி, உன் விடாமுயற்சி எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் நான் வேண்டுமானால் உனக்கு வேலை தருகிறேன்.
பையன்: வேண்டாம் சார்.
கடைக்காரர்: ஆனால் வேலை வேண்டும் என்று மன்றாடிக் கொண்டிருந்தாயே.
பையன்: இல்லை சார், என் வேலை எப்படி இருக்கிறது என்று செக் பண்ணிப் பார்த்தேன். நான் பேசிக்கொண்டிருந்தேனே, அந்தப் பெண்மணிக்குத் தோட்டவேலை செய்யும் பையன் நான்தான்.