திருக்குறள் அரிய நூல் என்கிறோம். அத்தகைய குறளே புறச்சமயத்தைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டது எனக்கருதித் “தீக்குறளைச் சென்று ஓதோம்” என்று பாடினார் கவியரசி ஆண்டாள். திருப்பள்ளியெழுச்சி பாடிய விப்ரநாராயணர், சமணர் சாக்கியர் போன்றோர் தலைகளை “அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மா நகருளானே” என்று பாடினார். பெரும் பக்தர்களாக மட்டுமன்றிக் கவி வல்லவர்களாகவும் இருந்தவர்களே இப்படி என்றால் அக்காலச் சாதாரண மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும்?
இன்றைய நமது தோழர்களோ என்றால், இத்தனையையும் உண்மையில் செய்துகாட்டியே தீருவேன் என்கிறார்கள். மக்கள் எப்போது நல்ல மனநிலை பெற்று நிம்மதியாக வாழுவது?
Category: தினம்-ஒரு-செய்தி
குறளில் சில விசித்திரங்கள்
திருக்குறள் மிக உயர்ந்த நூல் என்பதில் நமக்குத் தனிப் பெருமை. இருப்பது நியாயம்தானே? இங்கே அதன் பெருமைகளை நான் பேச வரவில்லை. சில விசித்திரங்களை எடுத்துக்காட்டுவது மட்டுமே நோக்கம்.
கடவுள் என்ற சொல்லைத் திருவள்ளுவர் எங்குமே கையாளவில்லை. ஆனால் முதல் அதிகாரத்துக்குக் கடவுள் வாழ்த்து என்று யார் எப்போது பெயர் வைத்தார்கள், எப்படி அது நிலைபெற்றது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
எல்லா நூலாசிரியர்களும் தாங்களே கடவுளை வாழ்த்துவதுதான் மரபு. அறநூல்களுக்குப் பிற்பட்ட காலத்திலிருந்து இதுதான் தமிழில் காணப்படும் வழக்கு. ஆனால் திருவள்ளுவர், தாம் கடவுளை வாழ்த்தவில்லை, மற்றவர்களைத்தான் வாழ்த்துமாறு சொல்லுகிறார். இது ஒரு வேடிக்கை அல்லவா?
அறத்துப்பால், பொருட்பால்களை நேரடியாகத் தமது அறிவுரை முறையில் அளித்த திருவள்ளுவர், ஏன் காமத்துப்பாலில் அத்தகைய முறையினைக் கையாளவில்லை? ஏன் சங்க அக இலக்கிய மரபின்படி நாடகப்பாங்காக அமைத்திருக்கிறார்? இதுவும் ஒரு விசித்திரமே.
கேள்விப்பட்டவை
நீங்கள் சமையல் எரிவாயு பயன்படுத்துபவரா? அப்படியானால், ‘காஸ்’ தீர்ந்துபோய் வேறொரு சிலிண்டர் வேண்டுமென்று கேட்கத் தொலைபேசியில் ‘புக்’ செய்யும்போது தப்பித் தவறிக்கூடய பூச்சியம் (0) எண்ணை அழுத்திவிடாதீர்கள். அப்படிச் செய்தால் உங்களுக்கு மானியம் (subsidy) வேண்டாம் என்று நீங்கள் கூறிவிட்டதாகத் தீர்மானித்து, பணம் தருவதை நிறுத்திவிடுவார்கள். பிறகு மறுபடியும் பெறுவது கடினம்.
நம் நாட்டில் சளிபிடித்தால் (பிடிக்காவிட்டாலும் கூடத்தான்) கண்ட இடத்தில் துப்புவதும் சளியைச் சிந்துவதும் எல்லாம் நம் மனிதர்கள் செய்பவை. தூய்மையான இந்தியாவுக்கு முன்னால் நல்ல சுகாதாரப் பழக்கங்களை நம்மவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். உதாரணமாக, சளியைச் சிந்தினால் உங்களுக்குத்தான் முதல் அபாயம். அதனால் ஏற்படும் அழுத்தத்தினால் சளி, சைனஸ்களுக்குள் செல்கிறது. அதனால் வைரஸோ பாக்டீரியாவோ உள்ளே பரவி மேலும் நிலைமை மோசமாகிறது. வெளியிலோ தொற்று பரவுகிறது.
அளப்புகள்
இந்தியாவைப் போன்றதொரு மோசமான நாட்டில் ஏன் பிறந்தோம் என்று பலசமயங்களில் பெரும் மனச்சோர்வு ஏற்படுகிறது. 1947இல் விடுதலை கிடைத்தது. 2047 வந்தாலும் நம் நாடு முன்னேறப்போவதில்லை. பாதி இந்தியாவை வெளிநாட்டினரிடம் விற்றாகிவிட்டது. மீதி இந்தியாவை அரசியல்வாதிகள், முதலாளிகள், இருப்பவர்கள் பங்குபோட்டுக்கொண்டார்கள். எல்லாவற்றுக்கும் வரி வாங்குவார்கள், ஆனால் எதுவும் செய்ய மாட்டார்கள். சாலை வரி வாங்குவார்கள், நல்ல சாலை எங்கும் இல்லை. கல்வி வரி வாங்குவார்கள், கூடவே நாம் கல்விக் கொள்ளையர்களுக்கும் அழ வேண்டும். தண்ணீர் வரி வாங்குவார்கள், ஆனால் அரசாங்கமே தண்ணீரை விற்பார்கள். எதையும் மக்களுக்குச் செய்வது அரசாங்கத்தின் கடமை கிடையாது. மக்கள் வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகமாம். மற்றபடி எந்தக் கேள்வியையும் கேட்கக்கூடாது.
ஐந்தாண்டுகளில் பெரும் பொருளாதாரச் சரிவு காத்திருக்கிறது. பத்தாண்டுகளில் தண்ணீரே இல்லாமல் போய் கும்பல்கும்பலாய்ச் சாகப்போகிறார்கள். இதுதான் இந்தியா!
வெள்ளை ஆதிக்கம்
இன்று பலரும் காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் போன்ற சொற்களை அர்த்தமின்றி கையாளுகிறார்கள். மாணவர்களோ, ஏதோ பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள், காந்தி வந்தார், சுதந்திரம் வாங்கித் தந்தார் என்பது போலப் படித்துவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆனால் உண்மையில் வெள்ளையர்கள் தங்கள் ஆதிக்கத்துக்குக் கையாண்ட முறைகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை நாம் இன்று தக்க நூல்கள் வழியாக மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது. சான்றாக, ஈ. போலேர் (E. Boelaert) என்பவர் தமது நூலான La situation demographique des Nikundo-Mungo என்பதில், முன்னாள் பெல்ஜியக் காங்கோ பிரதேசத்தில் சுவாபா என்ற மாநிலத்தில் மக்களினங்கள் வெள்ளையர் நுழைவால் அழிந்துபோன நிலையை எடுத்துக்காட்டுகிறார். நவீன நாகரிகத்தின் நுழைப்பு, அந்த இனத்தின் உடல்சார்ந்த, ஒழுக்கவியல் சீரழிவுக்குக் காரணமாகியது. அவர்களுக்குள் பரிச்சயமே அற்ற கர்ப்பத்தடுப்பு, கருக்கலைப்பு, பாலியல் நோய்கள், மத நம்பிக்கைகளிலும் நடைமுறைகளிலும் தளர்ச்சி போன்றவை நிகழ்ந்தன. இவற்றின் விளைவாக, அந்த இனத்தின் இளைஞர்கள் தங்கள் பாரம்பரியமான பொதுக்குடி அமைப்பிலிருந்து வேரறுக்கப்பட்டனர், அதனால், அவர்களின் குடும்பங்கள், வழக்காறுகள், மரபுகள், தனிப்பட்ட உறவுகள் ஆகியவை சீர்குலைந்து போயின. மேற்கண்ட நூலாசிரியர் கூறுகின்றவாறு, அவருடைய புலனாய்வுகளின் போது (1950), திருமணமான நூறு பெண்களுக்கு முப்பது குழந்தைகள் வீதமே இருந்தன. நான்கில் மூன்று குடும்பங்களுக்குக் குழந்தைகள் இல்லை. இவர்களில் பாதிப் பெண்கள் மலட்டுத்தனம் கொண்டவர்களாக இருந்தார்கள். பின்னர் 1970 அளவில் அந்த இனமே முற்றிலும் அழிந்துபோயிற்று. தங்கள் பொருளாதார மேம்பாட்டுக்காக இம்மாதிரி வெள்ளையர்கள் அழித்து ஒழித்த இனங்கள் ஆயிரக்கணக்கானவை. ஒருகாலத்தில் இப்படி நேரடியாக மனிதர்களை அழித்தவர்கள் இன்று பொருளாதாரத்தால் தாக்கிச் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லா ஆத்திகவாதிகளுக்கும் ஒரு கேள்வி: ஆமாம், கடவுள் என்பவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
வேண்டாம் இது
ஒரு காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வோக்ஸ்டேடு சட்டம் என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. மதுவைத் தடைசெய்யும் சட்டம் அது. ஆகவே மது விற்பனை தடைசெய்யப்பட்டு, மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால் குளிர்நாடாகையினாலும், அங்கு மது அருந்துவது பலகாலமாகப் பழகிவிட்ட ஒன்றானபடியினாலும் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவேயில்லை. கள்ளச்சாராயம் பெருகி, அரசாங்கத்துக்குக் கிடைக்கவேண்டிய வரி கிடைக்காமல் போயிற்று. ஊழல் பெருகிறது. இறுதியில் அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.
இந்தியாவிலும் இதே கதிதான். 1970க்குப் பின் எத்தனைமுறை தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கும் மது ஏற்பும் மாறிமாறிக் கொண்டுவரப்பட்டுள்ளன? இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் கொள்கைதான் என்ன? ஒருபுறம் எங்கு பார்த்தாலும் அரசாங்கமே “குடி குடியைக் கெடுக்கும்”, “மது அருந்துவது உடலுக்குத் தீங்கு பயக்கும்” என்று விளம்பரம் செய்கிறது. மறுபுறம் அதுவே மதுக்கடைகளை ஏராளமாகத் திறந்து மது விற்பனையும் செய்கிறது. அப்படியானால் குடியைக் கெடுப்பதும், மக்கள் உடலுக்குத் தீங்கு பயப்பதும்தான் அரசாங்கத்தின் கொள்கையா? ஒன்று, மதுக்கடைகளை மூடுங்கள். அல்லது போலியான விளம்பரத்தையாவது நிறுத்துங்கள். அண்மையில் மத்திய மதுவிலக்கு அமைச்சர்வேறு, மதுக்கடைகளுக்கு ஆதரவாக, அவற்றை மூடக்கூடாது என்று பேசியிருக்கிறார். ஒன்றில் உறுதியாக இருக்கலாமே?
இனியவை என்றும்
நேற்றுக் காலை திரைப்படங்களுக்கும் பாடல்களுக்கும் இசையமைத்த திரு. எம். எஸ். விஸ்வநாதன் மறைந்துவிட்டார். உண்மையில் அவர் ஒரு மாமேதைதான். ஏறத்தாழ 1953 முதலாக இசையமைத்தவர். சிறு வயது முதலாகவே பெயர் அறியாமலே நான் அவருடைய இரசிகன் என்றாலும் அவர் இசையமைத்து உணர்வு பூர்வமாக நான் இரசித்த சிறப்பான பாடல் (காலத்தால் அது எவ்வளவு பழமையானது என்பது தெரிய வந்தது பின்னால்தான்) ‘கூவாமல் கூவும் கோகிலம்’ என்பதாக இருக்கலாம் (1954). பிறகு அவர் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் மனத்தைக் கொள்ளை கொண்டவை. ‘நினைக்கத தெரிந்த மனமே’ முதலான சோக கீதங்கள், ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’… என எத்தனை எத்தனையோ. அவருக்கு பெரிய கௌரவங்கள் ஒன்றும் தேடிவரவில்லை என்றாலும் எத்தனை எத்தனையோ பாடல்கள் வழியாக எத்தனை எத்தனையோ இரசிகர்கள் மனங்களில் அவர் வாழ்ந்துகொண்டிருப்பார். என்றும் கேட்க இனியவை அவருடைய இசையமைப்புகள். குறிப்பாக, மலைக்கோட்டை திரு. வி. ராமமூர்த்தியுடன் இணைந்து அவர் இசையமைத்த பாடல்கள் இனியவை, என்றும் இனியவை.
எளிய உண்மைகள்
நாம் புத்தகங்களில் படிக்கும் சில மெய்ம்மைகள் விசித்திரமாக இருக்கின்றன. சான்றுக்கு இரண்டு மட்டும் இன்றைக்கு.
1. நமது வயிற்றில் ஹைடிரோகுளோரிக் அமிலம் இருக்கிறது என்று தெரியும். உணவுப்பொருள்களைச் செரிக்க இது பயன்படுகிறது. உணவுப்பொருள் எதுவும் வயிற்றில் இல்லை என்றால் வயிற்றில் புண்ணை (அல்சர்) உண்டாக்கிவிடுகிறது. வயிற்றிலுள்ள இந்த அமிலம் ஐந்தாறு நாட்களில் ஒரு ஷேவிங் பிளேடையே ஜீரணித்துவிடும் சக்தி படைத்தது என்கிறார்கள். (அதற்காக, உணவுப்பண்டங்கள் விலை ஏறிக்கிடக்கும் இந்த நாட்களில் பிளேடே தேவலாம் என்று தின்னத் தொடங்கிவிடாதீர்கள்!)
2. ஒருவர் சாப்பாடு எதுவும் இல்லாமல் 25 முதல் 30 நாள்வரை கூட இருக்கலாம். ஆனால் தூக்கமின்றிப் பதினொரு நாள்தான் உயிர்வாழ முடியும். (ஆனால் தூக்கமற்றவர்களின் அருகில் சென்று எவரும் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள், அப்புறம் நீங்கள் பதினொரு நாள் அல்ல, ஓரிரு நாள்தான் உயிர்வாழ முடியும்!)
சடங்குகள்
வேதகாலத்திற்குப் பிறகு பலரும் சமயச் சடங்குகளை எதிர்த்ததால் வேதச் சடங்குகள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தன, ஆனால் இன்றுவரை அவை தொடரவே செய்கின்றன. சான்றாக, ஹைடிரஜன் குண்டு பரவுவதைத் தடுக்க 1957இல் இந்திய பிராமணர் குழு ஒன்று மிகப்பெரிய யாகம் ஒன்று செய்தது.
பிறகு, 1970இல், இந்திரா காந்தியை எதிர்த்த அன்றைய அரசியல்வாதிகள், அவர் இறப்பதற்கென யாகம் வளர்த்த ஒரு புரோகிதனை ஏற்பாடு செய்தனர். ஆனால் வேடிக்கை, இந்திராகாந்தியைக் கொல்ல ஏற்பாடு செய்யப்பட்ட புரோகிதனே யாகம் செய்துகொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்துபோனான்.
கேள்வி: அவனது கர்மவினை, அப்படித்தானே?
பதில்: நவீன இந்துமத நோக்கிலிருந்து பார்த்தால், ஒருவேளை, ஆமாம். ஆனால் இந்திய-பிராமணக் காலப்பகுதியில் இந்தியர்கள் கர்மம் (கர்மவினை) என்ற கருத்தைக் கண்டுபிடித்திருக்கவில்லை. உண்மையில் அவர்கள் அப்போது இந்துக்களாகவே இல்லை. ஏதோ தங்களுக்கென சில புனித நூல்கள்-வேதங்கள், பிறகு வேதக்கடவுளர்களை அழைக்க மிக விரிவான சடங்குகள் கொண்ட அமைப்பு இவற்றைத்தான் வைத்திருந்தார்கள்.
(கீழைத்தத்துவம் என்ற நூலில், இந்தியத் தத்துவம் என்ற பகுதியிலிருந்து)
இன்றும் விடாமல் யாகங்கள் செய்கிறார்கள். எதற்கு, யார் என்று உங்களுக்கே தெரியும்.
பண்பாட்டுப் பெருமிதம்
சீனப்பேரரசர் சி’என் லங்கிற்கு பிரிட்டனின் மூன்றாம் ஜியார்ஜ் அரசன் வணிக அனுமதி வேண்டி ஒரு தூதுக்குழு அனுப்பியிருந்தான். அதற்கு அவர் 1793இல் தனது தூதர் மூலமாக இங்கிலாந்தின் அரசனுக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதில் அவர் ‘பணிவுடன்’ தெரிவிக்கிறார்:
“அரசனே, நீ பல கடல்களுக்கப்பால் வாழுகிறாய். இருப்பினும் உனது தாழ்மையான ஆசையால் தூண்டப்பட்டு, எங்கள் நாகரிகத்தின் சிறப்புகளில் பங்கு கொள்ள விரும்பி, உன் ஞாபகச்சின்னங்களை ஏந்திய ஒரு தூதுக் குழுவினரை அனுப்பி யிருக்கிறாய். எங்கள் நாகரிகத்தைப் பெறவேண்டிய ஒரு பேராவலை எங்கள் தெய்விக வமிசத்தின்மீது உனக்குள்ள மரியாதை தூண்டியிருக்கிறது என்று நீ உறுதி கூறினாலும், எங்கள் சடங்குகளும் சட்டவிதிகளும் உனக்குரியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன ஆதலின் உனது தூதுக்குழுவினர் எங்கள் நாகரிகத்தின் அடிப்படைக் கூறுகளைப் பெறமுடிந்தாலும், எங்கள் நடத்தை முறைகளையும் வழக்காறுகளையும் உன் அந்நிய மண்ணுக்கு மாற்றித் தர முடியாது.
எங்கள் நாகரிகத்தின் கம்பீரமான மேன்மை வானுலகின்கீழுள்ள எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது, எல்லா தேசங்களின் அரசர்களும் அவர்களுடைய விலைமதிப்பற்ற பரிசுகளை நிலத்தின் வழியாகவும் நீரின் வழியாகவும் அனுப்புகிறார்கள். நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம் என்பதை உன் தூதுவரே நேராகப் பார்த்து அறிந்துகொள்வார். விசித்திரமான, வினைத்திறம் மிக்க பொருள்கள்மீது நான் மதிப்பு வைக்கவில்லை, எனவே உன் நாட்டின் உற்பத்தி யாளர்களால் எனக்குப் பயனில்லை”.
இதை நாம் கம்பீரம் என்பதா? தன் நாட்டின்மீதுள்ள, பண்பாட்டின் மீதான பற்று என்பதா? எவ்விதம் நாம் நோக்கினாலும், பிரிட்டன் புகையிலையைச் சீனாவில் இறக்குமதி செய்ததும், அதை விரைவில் தன் வணிகத்திற்கும் ஆட்சிக்கும் உட்படுத்தியதும் வரலாற்று மெய்ம்மைகள். ஆனால் இதுபோன்றதொரு பதிலை எந்த இந்திய அல்லது இந்தியப்பகுதிகளில் உள்ள ஆட்சியாளர்களாவது பிரிட்டனுக்குச் சொன்னது உண்டா?