ஜனநாயக அரசியலில் சமூக வாழ்க்கையின் தனிப்பண்பே, மிகச்சிலரின் விருப்பங்களுக்குச் சிந்தனையற்ற பலரின் கீழ்ப்படிதலாகத்தான் இருக்கிறது. நமது வாழ்க்கையில் நிகழும் பரிச்சயமற்ற அனுபவங்களின் திடீர்ப் படையெடுப்புதான் அரசியலின் பெரும்பரப்பினைப் புரிந்துகொள்ள நம்மில் பெரும்பாலோரைத் தூண்டுகிறது என்பதால்தான் மிகச்சிலரும்கூட அரசியல் துறையில் சிந்திக்கிறார்கள்.
Category: தினம்-ஒரு-செய்தி
ரொம்ப முக்கியமான பிரச்சினை!
இந்தியில் போலவே ஃப்ரெஞ்சு மொழியிலும் எல்லாப் பெயர்ச்சொற்க ளுக்கும் ஆண்பால் பெண்பால் உண்டு. உதாரணமாக, வீடு என்பது பெண்பால் (La Maison). ஆனால் பென்சில் என்பது ஆண்பால் (Le Crayon). இப்படி ஓர் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன், “ஐயா, கம்ப்யூட்டர் (ஃப்ரெஞ்சில் ordinateur) என்ன பால்?” என்று கேட்டான். “கம்ப்யூட்டர் என்ன பாலாக இருக்கவேண்டும் என்று நீங்களே தீர்மானியுங்கள்” என்று அந்த ஆசிரியர் அதையே ஒரு பயிற்சியாக மாணவர்களுக்கு வழங்கிவிட்டார். அந்த வகுப்பில் இருபாலாரும் இருந்தார்கள். பெண்களையும் ஆண்களையும் தனித்தனிக் குழுக்களாகப் பிரித்த ஆசிரியர், “கணினி என்ன பாலாக இருக்கவேண்டும் என்பதற்கு ஒவ்வொரு குழுவும் நான்கு காரணங்கள் தரவேண்டும்” என்றும் சொன்னார்.
‘கம்ப்யூட்டர், பெண்பால் பெயர்ச்சொல்லாகத்தான் (La ordinateur) இருக்க வேண்டும்’ என்று ஆண்கள் குழு தீர்மானித்தது. ஏனென்றால் பெண்களைப் போலவே, கம்ப்யூட்டர்கள் உள்ளன:
அ. அவற்றின் உள்தர்க்கத்தைப் படைத்தவனைத் தவிர வேறு ஒருவரும் புரிந்துகொள்ள முடிவதில்லை.
ஆ. பிற கம்ப்யூட்டர்களோடு அவை உறவாடுகின்ற மொழி மற்றவர் களுக்குப் புரியாதது, வித்தியாசமானது.
இ. மிகச் சிறிய தவறுகளையும் பின்னால் மீள்பார்வைக்கென நீண்டகால ஞாபகத்தில் குறித்து வைத்துக்கொள்கின்றன.
ஈ. ஒன்றை வாங்கிவிட்டால் பிறகு அதற்கான பொருள்களுக்கு (accessories) காலம் முழுவதும் நிறையச் செலவு செய்யவேண்டியிருக்கிறது.
இதற்கு மாறாக, பெண்கள் குழு, கம்ப்யூட்டர் என்பது ஆண்பாலாகத்தான் (Le ordinateur) இருக்க வேண்டும் என்று தீர்மானித்தது. காரணங்கள்:
அ. ஏதாவது வேலை செய்ய வைக்க வேண்டுமானால் அவற்றை ‘ஆன்’ செய்ய வேண்டும் – அதாவது தாஜா செய்ய வேண்டும்.
ஆ. அவற்றிடம் ஏராளமான தகவல் இருந்தாலும் தாங்களாக எந்த முடிவும் எடுக்க முடியாதவை.
இ. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத்தான் அவற்றை வாங்குகிறோம், ஆனால் அவைகளே பெரும்பாலும் பிரச்சினைகளாக மாறிவிடுகின்றன.
ஈ. ஒன்றை வாங்கியபிறகுதான், சற்றுப் பொறுத்திருந்தால் இன்னும் நல்லதாக மற்றொன்று கிடைத்திருக்குமே என்று தோன்றுகிறது.
ஃப்ரெஞ்சுக்காரர்கள் என்ன முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. நம் இந்திக்காரர்கள் என்றால் எளிதில் தீர்மானித்துவிடுவார்கள். கட்டுப்படுத்து பவை, ஆள்பவை எல்லாம் ஆண்கள்; கட்டுப் படுத்தப்படுபவை, ஆளப்படுபவை எல்லாம் பெண்கள். அவ்வளவுதான்!
மனம் திறந்த கடிதம்
பிரதமர் மோடி அவர்களுக்கு,
ஜனநாயகம் என்றாலே மக்களின் ஆட்சி என்றுதான் பொருள். மக்களுக்கு மதிப்புக் கொடுங்கள். இதுமாதிரிப் போராட்டத்தை ஒரு இருபது முப்பதுபேர் கையிலெடுத்திருந்தால், நக்சலைட், பயங்கரவாதி என்று பெயர் வைத்துச் சுட்டுத் தள்ளியிருப்பீர்கள். ஒரு சிலராவது ஏதாவது சிறிய அடிதடியில் ஈடுபட்டிருந்தாலும் காவலர்களை வைத்து குண்டர்கள் என்று அடித்து நொறுக்கியிருப்பீர்கள். ஆனால் பாவம், லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு அமைதியாக மழையிலும் பனியிலும் தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களை என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமும் இல்லை.
120 கோடி மக்களை பாதிக்கும் பெரிய அறிவிப்புகளை எல்லாம் ஒரு நிமிட நேரத்தில் வெளியிட்ட உங்களுக்கு ஜல்லிக்கட்டுக்கென ஒரு நிரந்தரச் சட்டம் ஓரிரு நாட்களில் கொண்டுவருவது முடியாததா என்ன? பெரும் பெரும் அறிவிப்புகளை எல்லாம் திடீரென்று வெளியிட்டுவிட்டு பிறகு முகம் காட்டாமல் ஓடிப்போய்விடுவதில் நீங்கள் சமர்த்தர் என்பதும், உங்கள் சொந்தப் பாராளுமன்றத்தையே சந்திக்கும் திராணியில்லாதவர் என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஜல்லிக்கட்டு விஷயத்திலும் அதையே செய்தீர்கள். முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் பொறுப்பைத் தள்ளிவிட்டு நீங்கள் விலகிக் கொண்டீர்கள். அவரும் பாவம், தன் கட்சிக்கும் தனக்கும் ஒரு அரசியல் ‘லாபம்’ கிடைக்கும் என்று ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்து விட்டுப் பிறகு ஒன்றும் செய்ய முடியாமல் திணறிப்போனார்.
தமிழர்களின் பாரம்பரியத்தை மதிப்பதாக நீங்கள் சொல்வது திரும்பத் திரும்பச் சொல்வது உண்மையானால் உடனே எங்களுக்கு ஜல்லிக்கட்டுக்கென நிரந்தரச் சட்டத்தைக் கொண்டுவாருங்கள். பவானி ஆறு, காவிரி ஆறு, உள்ளிட்ட மற்ற ‘டிமாண்ட்’களை நாங்கள் சில நாட்களுக்குள் வாங்கிக் கொள்கிறோம். தமிழர்களைப் பாரபட்சமாக நடத்தியே பழக்கப்பட்ட உங்களுக்கு இது கடினம்தான். மேலும் “தமிழகத்தில் நம் கட்சி காலூன்றமுடியாது, நாம் ஏன் இவர்களுக்கு எதுவும் செய்யவேண்டும்” என்ற உங்கள் குறுகிய கண்ணோட்டமும் இருக்கவே செய்கிறது. அதற்கும் அப்பால் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஒத்துப்போகாத உங்கள் காவிக் கலாச்சாரமும் இருக்கவே செய்கிறது.
இருந்தாலும், உடனடியாக நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான். முதலில் விலங்குநல வாரியத்தின் விதிகளில் திருத்தம் கொண்டுவாருங்கள். காட்சிப் பட்டியலிலிருந்து காளைகளை நீக்குங்கள். (இவையெல்லாம் உங்கள் அரசாங்க இலாகாக்கள் தானே?) அந்த வாரியம் உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டின்மீது போட்டிருக்கும் வழக்கை வாபஸ் வாங்கிவிடுங்கள். (உச்சநீதி மன்றத்தின்மீது உங்களுக்கு இருக்கும் மரியாதை ஊரறிந்த ஒன்று அல்லவா!) பீட்டா அமைப்பைத் தடைசெய்வதில் பிரச்சினை ஒன்றுமில்லை. அது உலகமுழுவதும் செய்திருக்கும் அட்டூழியங்கள் எங்களுக்கே தெரியும்போது உங்களுக்குத் தெரியாதா என்ன? அதைக் காரணம் காட்டியே அந்த என்ஜிஓ அமைப்பைத் தடைசெய்யலாம். அடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஒரு நிரந்தரச் சட்டத்தை வழங்கிவிடுங்கள். இதற்கெல்லாம் அதிகபட்சம் உங்களுக்கு மூன்று நாள் தேவைப்படலாம். எப்படியும் பத்துநாள் கழித்துக் கூடப்போகும் பாராளுமன்றத்தை உடனே கூட்டுங்கள். இவற்றை எல்லாம் செய்தால் நிச்சயம் உலகமுழுவதிலும் உள்ள தமிழர்கள் அமைப்புகள் மத்தியிலும் அந்தந்த நாடுகள் இடையிலும் உங்கள் மதிப்பு ஜனநாயகக் காவலர் என்பதாக உயரும். மதிப்பு என்பது இலட்ச ரூபாய் மதிப்புள்ள கோட்டுப் போட்டுக் கொள்வதில் இல்லை, பாருங்கள்!
அவரவர் இடம் அவரவர்க்கு
2017 பொங்கலுக்குப் பிந்திய வாரம் தமிழ்நாட்டு, இந்திய மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வாரம். உலகம் எத்தனை எத்தனையோ போராட்டங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் தன்னெழுச்சியாக, எந்தக் கட்சியின் பின்புலமும் இன்றி, எந்தப் பெரிய கோடீஸ்வரர்களின் ஆதரவும் இன்றி ஓர் இனத்து இளைஞர்கள் தங்கள் உரிமைகளுக்காக, பண்பாட்டுக்காகத் திரண்டெழுந்த இந்த நிகழ்வு, அதிலும் மிகப் பொறுப்பாக அறவழியில், மிக அமைதியான முறையில் நடைபெற்று வருவது உலகத்துக்கே ஒரு முன்மாதிரி. உண்மையில் தமிழக இளைஞர்கள் உலகத்துக்கே முன்மாதிரியாகப் பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கிறார்கள்.
நண்பர்கள் பலர் குறிப்பிட்டிருப்பதுபோல இப் போராட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனாலும் குறிப்பாக தமிழகத்தில் சினிமாத் துறையும் அரசியலும் பின்னிப் பிணைந்து விரவிக் கிடப்பதால் ஒரு சில கருத்துகளைக் கூற முனைகிறேன்.
படத்தில் அம்மனாக நடித்துவிட்டுத் தனக்கு எல்லா சக்திகளும் ஆற்றலும் வந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளும் நடிகையைப் போல இன்று தமிழகத் திரை நட்சத்திரங்கள் நடந்துகொள்கின்றனர். இதற்கு முன்மாதிரியாக, இது போன்ற ஒரு மாயையை உருவாக்கியவர் மறைந்த எம்.ஜி.ஆர். இன்றுவரை சூப்பர் சூப்பர் ஸ்டார்களெல்லாம் மிகக் கேவலமாக நடந்துகொண்டிருக்கின்றனர்.
இந்தப் போராட்டம் அவர்களுக்குத் தங்கள் நிலையை உணர்த்தியிருந்தால் மிக நல்லது. அவர்களும் ஒரு தனியார் கம்பெனி அலுவலர் போன்றவர்கள்தான், தங்கள் நடிப்பு தங்கள் பிழைப்புக்கானது, அதற்குமேல் ஒன்றுமில்லை என்பதை அவர்கள் உணர்வது நல்லது. இது தெரியாமல் ஊடகங்களில் ஆட்டமாக ஆடி வாங்கிக் கட்டிக் கொள்ளும் நடிக நடிகையர்களையும் பார்க்கிறோம்.
இதேபோல்தான் தமிழக அரசியல்வியாதிகளும்-சாரி, அரசியல்வாதிகளும். சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளாகத் தமிழக அரசியல்வாதிகள் தங்களுக்குச் சொத்துச் சேர்த்துக்கொள்வதையும், கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பதையும் தவிர வேறு எதையும் தமிழக மக்களுக்காக என உருப்படியாகச் செய்யவில்லை. இதில் மற்ற மாநிலத்திலும் அப்படித்தானே இருக்கிறார்கள் என்றெல்லாம் உதாரணம் காட்டிப் பேசத் தேவையில்லை. இனிமேலாவது ஒரு தூய்மையான அரசியலுக்கு நம் அரசியல்வாதிகளும், முக்கியமாக அதிகாரிகளும் துணை செய்தால் நல்லது.
போராட்டத்தில் மாணவர்கள் மிக எச்சரிக்கையாகவே அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் தவிர்த்திருக்கிறார்கள். இது மிகவும் பாராட்டுக்குரியது. மக்களின் போராட்டத்தைத் தாங்கள்தான் உருவாக்கி விட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்திப் பின்னால் வாக்குப் பொறுக்க வழிவகை செய்துகொள்வார்கள் இவர்கள்.
எப்படியோ, தமிழகத்துக்கு நல்லது நடந்தால் சரி.
மத்திய அரசும் இந்தப் போராட்டத்தினால் தமிழக மக்கள் சக்தியை உணர்ந்து இனிமேலாவது தமிழகத்தின் நலன்களைப் புறக்கணிக்காமல் பொறுப்பாக நடந்துகொண்டால் நல்லது. தமிழகம் முன்னேறினால் அதுவும் இந்திய மக்களின் முன்னேற்றம்தானே என்பதைக் குறுகிய கட்சிக் கண்ணோட்டமின்றிப் புரிந்துகொள்வது எல்லாக் கட்சிகளுக்கும் பயனளிக்கும்.
அனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்
இன்று தமிழர் திருநாள். இனிவரும் தமிழ் ஆண்டிலேனும் மகிழ்ச்சி பொங்கி, நேர்மை தழைக்க, அனைவர் வாழ்க்கையும் சிறக்க, குறிப்பாக விவசாயிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியுற நாம் அனைவரும் இந்தப் பொங்கல் திருநாளில் வாழ்த்துவோம்.
ஆனந்தவிகடன் விருது
இன்று ஆனந்தவிகடன் இதழில், இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு என்ற எனது மொழிபெயர்ப்பு நூலுக்காக எனக்கு இவ்வாண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது அளிக்கப்படுவதாகச் செய்தியைப் படித்தேன். மேற்கொண்டு செய்தி சில நாட்களில் தெரியவரலாம். -க. பூரணச்சந்திரன்
ஜல்லிக்கட்டுப் பிரச்சினை
வழக்கமாகத் தமிழகத்தில் நடந்துவந்த ஜல்லிக்கட்டு இப்போது ஒரு பிரச்சினையாகிவிட்டது. ஓர் இன மக்களின் பண்பாட்டு வழக்காற்றிற்கு இடம் தராமல் உச்சநீதி மன்றமும் மத்திய அரசும் அடம் பிடிக்கின்றன. உண்மையில் ஜல்லிக்கட்டு, உச்சநீதி மன்றத்தினால் முன்வைக்கப் படுவதுபோல, பிராணிகளுக்குத் தீங்கிழைப்பது அல்ல என்பதைப் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ஏ.எல். பாஷம் தனது The Wonder that was India என்ற நூலில் எடுத்துரைத்திருக்கிறார். அவருடைய சொற்களை அப்படியே இங்கு தருகிறேன்.
One form of animal contest confined to the Dravidian South was the bullfight, of which we have a vivid description in an early Tamil poem. This sport did not closely resemble the Spanish bullfight, where the scales are heavily weighted against the bull, for here the bull appears to have had the advantage….they (the Tamils) made no attempt to kill the bull, and it was not previously irritated, but the bullfight was evidently a sport of great danger (i.e. for men, not for the bull), for the poem gives a gory description of a victorious bull, his horns hung with the entrails of his unsuccessful opponents….(A.L. Basham, The Wonder that was India, 3rd edition, Picador, p.211)
இவ்வாறு கூறி, பழங்காலத்தில் அது (முல்லைநிலத்தில்) ஒருவகை சுயம்வரம் போல இருந்தது என்றும், பழங்கால வளச் சடங்குகளுடன் தொடர்புடையது என்றும் சொல்லிச் செல்கிறார்.
இப்படிப்பட்ட பண்பாட்டுப் பெருமையுடைய ஒரு நிகழ்வை ஏன் இந்திய அரசாங்கமும், உச்ச நீதி மன்றமும் மறுக்கின்றன என்று புரியவில்லை. உச்சநீதி மன்றம் சென்ற ஆண்டு பிராணி வதைச் சட்டத்தின் அடிப்படையிலேயே இதை எதிர்த்தது. அவ்வாறு இல்லை என்பதை பேராசிரியர் பாஷமே விளக்கியிருக்கிறார். இதை யாராவது உச்சநீதி மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்.
பதினாறும் பதினேழும்
சென்ற ஆண்டு (2016) பலவகைகளிலும் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் (விளையாட்டுத் துறை ஒன்றைத் தவிர) துயரம் மிக்க ஆண்டாகவே சென்றது. சென்னை வெள்ளம் தொடங்கி, ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவு வரை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை வரை எல்லாம் துயரங்களே. குறிப்பாக அனைவர்க்கும் உணவளிக்கும் உலகத்தின் அச்சாணியாகிய விவசாயிகளின் எண்ணற்ற தற்கொலைகளும், சொந்தப் பணத்திற்காகக் கியூவில் நின்று உயிரிழந்தோரின் மரணங்களும் இதுவரை உலகம் காணாதவை.
இந்த 2017ஆம் ஆண்டேனும் உலக மக்களாகிய நமக்கு நன்மைகளைக் கொண்டுவரும் என்று நம்பிக்கையுடன் “ஒளிபடைத்த கண்ணினாய் வா, வா, உறுதி கொண்ட நெஞ்சினாய் வா, வா” என்று பாரதியைப் போல வரவேற்போம்.
விருது
வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது பற்றி மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது. நன்றி சாகித்ய அகாதெமிக்கு.
இது எப்படி நிகழ்கிறது?
இரண்டாயிரம் ரூபாய் பெறுவதற்காகக் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் நீண்ட வரிசைகளில் வங்கிகளுக்கும், செயல்படுகின்ற ஒருசில ஏடிஎம்களுக்கும் முன்னால் நிற்கிறார்கள். ஆனால் இந்தியா முழுவதிலுமே ஒரு சில பணமுதலைகளின் வீட்டில் பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் புதிய நோட்டுகளாகக் கைப்பற்றப்படுகின்றன. எப்படி நிகழ்ந்தது இது? இதுவும் கள்ளநோட்டுகளையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கின்ற முயற்சிதானா?