கல்வி-கேள்விகள். கேள்வி 1

(1)  அன்றைக்கு இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்காக உலகெங்குமிருந்து மாணவர்கள் வந்தனர். ஆனால் இன்றைக்கு நம் மாணவர்கள் நல்ல கல்வியைத் தேடி அயல் நாடுகளுக்குச் செல்கிறார்கள். இந்த நிலைமை ஏன்?

இக்கேள்விக்கு நான்கு தளங்களில் விடைதர வேண்டும்.
ஒன்று, பழங்காலத்தில் கல்வி மதம்சார்ந்ததாக இருந்தது. இந்தியாவில் இருந்த நலந்தா போன்ற பல்கலைக் கழகங்கள் பௌத்த மதத்தினால் உருவாக்கப் பட்டவை. பௌத்தக் கல்வியைத் தேடி வந்தவர்கள்தான் நலந்தா போன்ற நிலையங்களை அணுகினர். இந்தியாவில் வேறு மதங்கள் பல்கலைக் கழகங்களையோ கல்வி நிலையங்களையோ பெரிதாக உருவாக்கவில்லை. நாலந்தா போன்றவற்றிலும் எந்த அளவுக்கு மதச்சார்பற்ற துறைகளில் கல்வி அளிக்கப்பட்டது என்பது கேள்விக்குறி.

குருகுலக்கல்வி, பிராமண அடிப்படையில் இருந்தது. நலந்தாவைத் தேடி உலகத்தினர் வந்த காலத்திலேயே நம் கோடிக்கணக்கான கீழ்த்தட்டு மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பௌத்தம் அறிவுசார்ந்த மதமாக இருந்ததாலும், சாதி அடிப்படையைப் பார்க்காததாலும் அதில் மக்கள் சேர்ந்து படிக்க முடிந்தது. பௌத்தத்தில் சேராதவர்களில், அதாவது இந்துக்களில் பிராமணர்களுக்கு மட்டுமே கல்வி உண்டு, பிற சாதியினர்க்கு இல்லை–இதுதான் பழங்கால நிலை. இந்தியாவில் ஏதோ எல்லாருமே பல்கலைக் கழகங்களில் கற்றது போலவும், அயல்நாட்டவரும் தேடி வந்ததுபோலவும் பேசுவது அறியாமை.

இரண்டு, இன்று கல்வி அனைவர்க்கும் உரியது என்றாலும் நாம் தரமான கல்வியை அனைவர்க்கும் பொதுமைப் படுத்தவில்லை. இன்றும் எல்லா மாணவர்களும் அயல்நாடு செல்வதில்லை. வசதி உடையவர்கள் செல்கிறார்கள். வசதியற்றவர்கள், வசதியற்ற அரசுப்பள்ளிகளில்தான் சேர வேண்டியுள்ளது.

மூன்று, 2000ஆம் ஆண்டுக்குமுன் அயல்நாடு சென்று கல்வி கற்றவர்களை அதிகம் காண முடியாது. மிகப் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அவ்விதக் கல்விகற்றனர்.
2000ஆம் ஆண்டுக்குப்பின் உலகமயமாக்கலின் காரணமாக அயல்நாடு சென்று பணிசெய்பவர்கள் அதிகமாயினர். அதற்குமுன் அண்ணாந்து பார்க்கப்பட்ட அயல்நாடு செல்லுதல் என்பது பரவலாக எளிதாயிற்று. அதனாலும் அயல்நாடு சென்று கல்வி கற்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் கூடியுள்ளது. மேலும், உயர்கல்வி தவிரப் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வியில் இன்றும் தரத்தைத் தேடி உணர்வுபூர்வமாகக் கல்விக்காக அயல்நாடு செல்பவர்கள் குறைவு.

நான்கு, அயல்நாட்டுக் கல்விக்கும் நமது கல்விக்கும் இன்று வேறுபாடில்லை. நம் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தனித்தன்மை இழந்து மேற்கத்தியக் கல்வியின் சாரமற்ற போலியையே அளிக்கின்றன.
சான்றாக, ஏரோநாடிக்ஸ் என்பது உலகப் பொதுவான கல்வித்துறை. இதை நமது எம்ஐடியில் படிப்பதைவிட அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பது தரமானது என்பது வசதியுள்ளவர்களின் கருத்தாக உள்ளது.


ஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி

அண்மையில் மறைந்த விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி ஊடகங்களில் ஏராளமான தகவல்கள் வந்துவிட்டன. அவர் விஞ்ஞானிகளில் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’. சென்ற நூற்றாண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அடுத்து பிரபலமான விஞ்ஞானி யார் என்ற கேள்விக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் என்பதே பொதுவான பதிலாக இருக்கும்.

ஹாக்கிங்கின் 21-வது இளவயதில் “உங்களுக்கு தீர்க்க முடியாத நரம்பியல் நோய் வந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் உங்களுக்கு மரணம் நிச்சயம்” என்று மருத்துவர்கள் கூறியதை சமநிலை மனதுடன் அவர் ஏற்றுக் கொண்டார். மருத்துவர்களின் கணிப்பைப் பொய்யாக்கி, பல்வேறு உடல் உபாதைகளை தீரத்துடன் எதிர்கொண்டு தனது மரணத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒத்தி வைத்து அதிலும் சாதனை புரிந்தவர் ஹாக்கிங். சக்கர நாற்காலியிலேயே முடங்க நேரிட்ட போதும் உடலா, மனமா என்ற கேள்வி எழுந்தபோது உடலை விட மனமே மேலானது என்ற தத்துவத்தின் சின்னமாக வாழ்ந்து காட்டிய அவர் 2018 மார்ச் 14 அன்று சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

அவரைப் பீடித்தது சாதாரண நோய் அல்ல. உடலின் தசைகளை இயங்கச் செய்யும் நரம்பு செல்களை படிப்படியாகச் செயலிழக்கச் செய்யும் அரியதொரு நோய். ஒரு புறம் ஹாக்கிங்கின் உடல் செயலிழந்து கொண்டிருந்தபோது அவரது சிந்தனையும் கற்பனையும் சிறகடித்துப் பறந்த காட்சியைக் கண்டு உலகம் அதிசயித்தது. இந்தப் பேரண்டம் தற்போது இருப்பதுபோல் ஏன் இருக்கிறது.. முன்னர் என்னவாக இருந்தது.. போன்ற கேள்விகள் அவரைக் குடைந்தன. அனைத்தையும் படைத்தது கடவுளே என்ற கோட்பாட்டினை அவர் ஏற்கவில்லை. பேரண்டத்தைத் தோற்றுவிக்க ஒரு கடவுள் தேவையில்லை என்று கூறும் பகுத்தறிவுவாதியாக அவர் இருந்தார். மிகச் சிறிய துகள் இயற்பியலான குவாண்டம் மெக்கானிக்ஸ், மிகப் பெரிய பொருள்களுக்கான வானியல் இரண்டிற்கும் உள்ள சிக்கலான தொடர்புச் சங்கிலிகளை ஆய்ந்து தனது நுண்ணறிவுத் தேடலை அவர் தொடர்ந்தார்.

கருந்துளைகள்
ஹீலியம், ஹைட்ரஜன் ஆகிய எரிபொருட்கள் எரிந்து நட்சத்திரங்களுக்கு ஒளியைத் தருகின்றன. ஒரு கட்டத்தில் எரிபொருள் தீர்ந்து நட்சத்திரங்கள் சிறியவையாக ஆகி கருந்துளைகளாக மாறுகின்றன. மிக மிக அடர்த்தியான அவற்றிலிருந்து ஒளி கூடத் தப்பிக்க முடியாது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்தது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் கருந்துளைகள் பற்றிய பல புதிர்களுக்கு ஹாக்கிங் விடைகள் கண்டுபிடித்தார். அவற்றிலிருந்து எந்தக் கதிர்வீச்சும் தப்பிக்க முடியாது என்பது சரியல்ல, அவை வெப்பத்தை மிக மெதுவான வேகத்தில் வெளியிடக் கூடியவை என்ற ஹாக்கிங்கின் கண்டுபிடிப்பு அறிவியல் உலகிற்கு அவர் அளித்த மிகச் சிறந்த பங்களிப்பு எனலாம். பின்னர் அந்த வெப்பத்திற்கு “ஹாக்கிங் கதிர்வீச்சு” எனப் பெயரிடப்பட்டது.

பெரு வெடிப்புக் கோட்பாடு
ரோகர் பென்ரோஸ் என்ற மற்றொரு விஞ்ஞானியோடு இணைந்து பேரண்டம் தோன்றியதற்கான பெரு வெடிப்புக் கோட்பாட்டினை முதன்முதலாக முன்மொழிந்தவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்தான். பேரண்டம் ஒரு புள்ளியிலிருந்து தோன்றியது என்கிறது இக்கோட்பாடு. அதற்கு முன் காற்றோ, கிரகங்களோ, பால்வெளி மண்டலங்களோ கிடையாது. பேரண்டம் விரிந்து கொண்டே செல்கிறது என கணிதவியல் மூலமாக நிரூபித்த எட்வர்ட் ஹபிள் என்ற விஞ்ஞானி ஹாக்கிங்கின் பெரு வெடிப்புக் கோட்பாடு உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக அதை எடுத்துக் கொண்டார். பேரண்டம் விரிந்து கொண்டே செல்கிறது என்றால் அது ஒரு புள்ளியிலிருந்துதானே தொடங்கியிருக்க வேண்டும் என தர்க்கரீதியாக அவர் வாதிட்டார்.

வாழ்க்கையை ஹாக்கிங் உற்சாகமாக எடுத்துக் கொண்டார். பூமியின் தென்துருவச் சூழல் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அங்கு ஒரு முறை சென்றார். மேலேயிருந்து தடையின்றிக் கீழே விழும்போது கிடைக்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள அந்தப் பரிசோதனையை மேற்கொண்டார். ‘காலத்தின் சுருக்கமானதொரு வரலாறு’ என்ற அவரது முதல் புத்தகம் அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. ஒரு கோடி புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்தது. 35 மொழிகளில் அது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அவரது பெயர் காலம் உறுதியாகக் கடந்து நிலைத்து நிற்கும்.


மாற்று-நெகிழி

பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட போதிலும் நுகர்வோர் சந்தையில் பிளாஸ்டிக் பைகளின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கவே செய்கிறது. ஒவ்வொரு நாளிலும் நச்சுத்தன்மையுள்ள 40000 டன்கள் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. சுற்றுச்சூழலுக்கிசைந்த ஒரு பொருளை பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகத் தயாரிக்க வேண்டும் என அஷ்வத் ஹெக்டே என்ற மங்களூரைச் சேர்ந்த முதலீட்டாளர் முயற்சி எடுத்துக் கொண்டார்.

நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு அஷ்வத் ஒரு பசுமைத் தொழில்நுட்ப மாற்றினைக் கண்டுபிடித்தார். அவரும் அவரோடு சேர்ந்த 11 அறிவியலாளர்கள், சூழலியலாளர்களும் இந்தப் பொருளை உற்பத்தி செய்வதற்காக என்விகிரீன் பயோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் 100 சதம் இயற்கையான, மக்கக்கூடிய, பைகளை உற்பத்தி செய்யத் தொடங்கியிருக்கிறது. பார்ப்பதற்கு அவை பிளாஸ்டிக் பைகளைப் போன்றே இருக்கின்றன.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத இந்தப் பைகள் உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்குகளிலிருந்து கிடைக்கும் இயற்கையான மாவுப்பொருள், தாவர எண்ணெயிலிருந்து கிடைக்கும் பொருட்கள், காய்கறிக் கழிவுகள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. 180 நாட்களில் இந்தப் பைகள் மக்கிவிடும். தண்ணீரில் முக்கினால் ஒரு நாளில் கரைந்துவிடும். நாம் வழக்கமாக கடைகளுக்கு எடுத்துச் செல்லும் பைகள் எவ்வளவு எடையைத் தாங்குமோ அவ்வளவு எடையை இந்தப் பைகளும் தாங்கும். 8-லிருந்து 10 கிலோகிராம் வரை தாங்கக் கூடிய பெரிய பைகளும் உண்டு. இவற்றை உட்கொள்ளும் விலங்குகளுக்கு பிளாஸ்டிக் பைகளைப் போல் இவை தீங்கு செய்வதில்லை.

“என்விகிரீன் ( EG) பைகள் 100 சதம் இயற்கையானவை, உட்கொள்ளத்தக்கவை, மறுசுழற்சி செய்யப்படக்கூடியவை. தொடர்ந்து நாம் பயன்படுத்தினால் ஒரு கட்டத்தில் பிளாஸ்டிக்கையே நம் நாட்டிலிருந்து ஒழித்துவிடலாம்” என்கிறார் ஹெக்டே.

ஒரு பசுமைப் பையின் விலை பிளாஸ்டிக் பையின் விலையைவிட அதிகம்தான். ஆனால் ஒரு துணிப்பையின் விலையைவிடக் குறைவானது என்கிறார் அஷ்வத்தின் குழுவில் உள்ள ஓர் உறுப்பினர். “பசுமைப் பைகளில் ஒரு சதம் கூட பிளாஸ்டிக்கோ வேறு வேதியியல் பொருட்களோ கிடையாது. பைகளில் அச்சிடப் பயன்படுத்தும் பெயிண்ட் கூட பசுமைப் பொருட்களால் ஆனது” என்கிறது என்விகிரீன் நிறுவனம். கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட், தொழில் ஆராய்ச்சிக்கான ஸ்ரீராம் இன்ஸ்டிட்யூட் ஆகிய நிறுவனங்கள் பல சோதனைகளை நடத்தி இயற்கைப் பைகளில் சிறிதளவு கூட பிளாஸ்டிக் இல்லை என்பதை உறுதி செய்திருக்கின்றன.

கடைகளுக்கு எடுத்துச் செல்லும் பைகள் போக, குப்பை போடும் பைகள், எண்ணெய் அடங்கிய சிறு பைகள் (sachets)), குப்பைத் தொட்டிகள், பிலிம் பாக்கெட்டுகள், மேலங்கிகள், உறைகளுக்கான கவர்கள், சலவைப் பைகள் போன்ற பல்வேறு பொருட்களையும் என்விகிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. விவசாயிகளிடமிருந்து காய்கறிக் கழிவுகளை நல்ல விலை கொடுத்து வாங்கி விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கவும் நிறுவனம் உதவுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படூம் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் சுற்றுச்சூலுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்கவும் என்விகிரீன் நிறுவனம் எடுத்துவரும் முயற்சிகளை வரவேற்போம்.. வாழ்த்துவோம் !


மேனிலையாக்கத் தமிழர்கள்

தமிழர்கள் உயர்ந்த நிலை பெறும்போது தங்களைத் தமிழர்களாகக் காட்டிக் கொள்வதில்லை, வேறு மாநிலத்தவர்களாகக் காட்டிக் கொள்வது அடிக்கடி நடக்கும் விஷயம். ஏ.கே. இராமாநுஜன், ஆர்.கே. நாராயணன் போன்றவர்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தமிழகத்தில் அவர்களின் தந்தை/தாய்/பெற்றோர் இருவரும் பிறந்திருப்பர், அல்லது தாங்களே பிறந்திருக்கலாம், இருப்பினும் புகழ்வரும்போது அவர்கள் கர்நாடக மாநிலத்தவர் ஆகிவிடுகின்றனர். இவர்களின் முன்னோடி மாஸ்தி வேங்கடேச ஐயங்காரும் அப்படியே. சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் அப்படியே. சர்வபள்ளி திருத்தணிக்கு மிக அருகிலுள்ள சிற்றூர். ஆனால் இப்போதெல்லாம் அவரை ஆந்திரர் என்றே அடையாளப் படுத்துகிறார்கள்.
இந்த வரிசையில் அண்மையில் என் மருமகனும் சேர்ந்துள்ளார் என்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. திரு. டாக்டர் அருண் (அருணாசலம்) எம்.டி., ஐ.ஏ.எஸ்., என் தங்கை மகன். அவர் தந்தை சோளிங்கர் அருகில் ஆயல் கிராமத்தில் பிறந்தவர். தாய் ஆர்க்காடு. மைசூரில் தந்தை இரயில்வே வேலையிலிருந்த காலத்தில் பிறந்ததனால் அவர் மைசூர்க்காரர் ஆகிவிட்டார். ஐஏஎஸ் முடித்து இப்போது மிசோரம் பகுதியில் ஒரு கலெக்டராக இருக்கும் நிலையில் அவர் சிறந்த நற்பணிகள் ஆற்றிவருகிறார். அவரது சேவை மனப்பான்மை மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது. ஆனால் தன்னைப் பற்றி பேட்டி எடுத்த ஆங்கிலப் பத்திரிகையில் அவர் மைசூர்ப்பகுதியைச் சேர்ந்தவராக (கன்னடராக)த் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறார் என்பது வருத்தத்தை தருகிறது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்தது போல தமிழ்நாட்டு அறிவுஜீவிகளையும் அடுத்த மாநிலத்துக்கே தருகின்ற தமிழகத்தின் அவப்பேற்றினை என்ன சொல்ல?


கனவுகள்

1 தமிழர்கள் எல்லோருக்கும் உலக தரத்திலான மருத்துவம் இலவசமாக கிடைக்க வேண்டும்…
2 தமிழர்களின் குழந்தைகள் எல்லோருக்கும் உலகத் தரத்திலான ஒரே கல்வி முறையும் கல்வியும் கட்டணமின்றி கிடைக்க வேண்டும்
3 தமிழகமெங்கும் நீர் ஆதாரம் பெருகி நீர் வளம் மிக்க பூமியாக மாற வேண்டும்.
4 தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் ஒரு பைசா லஞ்சமில்லாமல் மக்களுக்கான சேவைகள் நடக்க வேண்டும்.
5 தமிழகத்தில் விவசாயம் சிறப்புற நடந்து ஏற்றுமதி செய்யுமளவுக்கு உபரி உற்பத்தி காய்கறி, பழங்கள், தானியங்களில் கிடைக்க வேண்டும்.
6 தன்னலமில்லாத , எளிமையும் பண்பும் கொண்ட அரசியல் தலைவர்கள் தமிழகத்திற்கு வேண்டும்.
7 தமிழர்கள் சாதி ஒழிந்த சமூகமாக ஒரே இன மக்களாக விளங்க வேண்டும்.


மய்யம்

கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று பெயரிட்டு கட்சியைத் தொடங்கியுள்ளார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பே ‘மய்யம்’ என்று பத்திரிகை நடத்தியவர் கமல். பல பத்திரிகைகளில், சிறுகதை, தொடர்கதை, கட்டுரைத் தொடர் என்றெல்லாம் எழுதிய கமல்ஹாசன், மய்யம் பத்திரிகையில், அடிக்கடி கவிதைகள் எழுதிவந்தார்.

தன் முதல் மகள் ஸ்ருதிஹாசன் பிறந்த போது, ஓர் கவிதை எழுதி, மய்யம் பத்திரிகையில் பிரசுரித்திருந்தார் கமல். இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, சுஜாதா உட்பட பலரும் பாராட்டியுள்ளனர்.
அந்தக் கவிதை இதுதான்…

ப்ரதிபிம்பம் பழங்கனவு மறந்த
என் மழலையின் மறுகுழைவு
மகளே உனக்கு என் மூக்கு என் நாக்கு
என் தாய் பாடித் தூங்கவைத்த தாலாட்டு
தினமுனக்காய் நான் படிப்பேன் என் குரலில்.
பாசத்தில் என் பெற்றோர் செய்த தவறெல்லாம்
தவறாமல் நான் செய்வேன் உன்னிடம்
கோபத்தில் ச்சீ என நீ வெறுக்க
உடைந்த மனதுடனே மூப்பெய்வேன்
என் அப்பனைப் போல்.
அன்று சாய்வு நாற்காலியில் வரப்போகும்
கவிதைகளை இன்றே எழுதிவிட்டால்
உன்னுடன் பேசலாம்
எழுதிவிட்டேன் வா பேச!

The hindu tamil